2016ல் சூரியன் இன்னும் ‘தீயா’ வேலை செய்யும்... விஞ்ஞானிகள் தரும் ஷாக்!
லண்டன்: இந்தாண்டை விட அடுத்தாண்டு இன்னும் வெயில் கடுமையானதாக இருக்கும் என எச்சரித்துள்ளனர் விஞ்ஞானிகள்.
இயற்கையிலிருந்து விலகி மனிதன் செயற்கை வாழ்க்கைக்கு அடிமையாகி விட்டான். சுகமான காற்று தரும் மரங்களை அழித்து விட்டு, ஏசியைக் கட்டிக் கொண்டு தூங்க வேண்டிய கட்டாயம். இதனால் ஆண்டுக்கு ஆண்டு பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
தொழிற்சாலைகள் பெருகி விட்ட நிலையில், அவற்றில் இருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்சைடு காரணமாக உலகம் வெப்பமயமாகி விட்டது.
அதிக வெயில்...
இதனால் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் மிக அதிகமான வெயில் இந்தாண்டு பதிவாகியுள்ளது. வெயிலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை சர்வதேச அளவில் மிகவும் அதிகம்.
2016ல் இன்னும் அதிகரிக்கும்...
வெயில் படிப்படியாகக் குறைந்து மழையில் நனையலாம் என நாம் எதிர்பார்த்திருக்க, இந்தாண்டை விட அடுத்தாண்டு இன்னும் வெயில் கடுமையானதாக இருக்கும் என எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள்.
கடும் வெப்பம் வீசும்...
இதனால் கடும் வெப்பமான சூழல் நிலவும் என்றும் அவர்கள் கூறுகின்றன. இங்கிலாந்தின் மிக உயரிய வானிலை ஆராய்ச்சி மையம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
கலிபோர்னியா உலர்ந்து விடும்...
மேலும், அட்லாண்டிக், பசிபிக் கடல் மேற்பரப்பில் வீசும் காற்றானது ஈரப்பதத்தை அகற்றி விட்டு வறட்சி நிலையை உருவாக்கும். அதன் காரணமாக ஆசியா, ஆஸ்திரேலியா, வடக்கு ஆப்பிரிக்கா, சகாரா பகுதி, அமெரிக்காவின் கலிபோர்னியா உள்ளிட்ட பகுதிகள் வெப்பத்தால் உலர்ந்து விடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
வரலாறு காணாத வறட்சி...
இந்த கடும் வெப்பம் காரணமாக மழை அளவு குறைந்து வரலாறு காணாத வகையில் வறட்சி ஏற்படும். அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பகுதிகளில் புயல் தாக்குதல்கள் அதிகம் இருக்கும் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.