புற்றுநோய்க் கட்டியால் அவதிப்பட்ட “தங்க மீன்” ஜார்ஜ் – மருத்துவர்கள் வெற்றிகர அறுவைசிகிச்சை!
மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் உணவு சாப்பிட முடியாமல் தவித்த தங்க மீன் ஒன்றிற்கு மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடத்தியுள்ளனர்.
10 வயதான ஜார்ஜ் என்னும் அந்தத் தங்க மீனானது புற்றுநோய்க் கட்டியால் தவித்து வந்தது.
அதனால் ஜார்ஜால் உணவு சாப்பிடவே இயலவில்லை. பின்னர்தான் அதற்குக் காரணம் ஜார்ஜின் தலைப்பகுதியில் காணப்பட்ட கட்டி என்பது தெரியவந்தது.
விலங்குகள் மருத்துவமனை:
அதனால், மெல்பர்ன் லார்ட் சுமித் விலங்குகள் நல மருத்துவமனையின் மருத்துவர்கள், முதன்மை மருத்துவரான டிரிஸ்டன் ரிச்சுடன் இணைந்து இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
சிக்கலான அறுவை சிகிச்சை:
ஜார்ஜின் தலைப்பகுதியில் காணப்பட்ட இந்த கட்டியானது மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டுள்ளது.
ஆக்ஸிஜன் குழாய்:
அனஸ்தீசியா இடப்பட்ட நீரில் விடப்பட்ட ஜார்ஜ் பின்னர் வாயில் ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட குழாய் வைக்கப்பட்டு இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது.
45 நிமிடம் சிகிச்சை:
45 நிமிடம் அறுவை சிகிச்சை நடைபெற்ற இச்சிகிச்சையில் ஜார்ஜ் மிகவும் ஆரோக்கியமாக இருக்கின்றது. தண்ணீரில் வாடிய இந்த தங்க மீன் இப்போது மறுவாழ்வு பெற்று தண்ணீரில் நீந்தி மகிழ்கிறது.
20 ஆண்டுகள் ஆயுள்:
இன்னும் 20 ஆண்டுகள் வரை இந்த தங்க மீன் உயிர்வாழும் என்று அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
20 ஆயிரம் ரூபாய்:
இந்த அறுவை சிகிச்சைக்கு 300 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 20 ஆயிரம் ரூபாய் செலவானதாம்.
மகிழ்ந்த மருத்துவமனை:
"ஜார்ஜ் நலமடைந்து விட்டது. தன்னுடைய வளர்ப்பு பெற்றோருடன் வீடு திரும்ப தயாராக உள்ளது" என்று முகப்புத்தக பக்கத்தில் தெரிவித்துள்ளனர் மருத்துவமனை நிர்வாகத்தினர். நாமும் ஜார்ஜின் நீண்ட வாழ் நாளுக்காக வேண்டிக் கொள்வோம்.