தானாக போன் செய்து பேசும் கூகுள் அசிஸ்டன்ட்.. சுந்தர் பிச்சை வெளியிட்ட சூப்பர் வீடியோ!
கூகுளின் வெளியீடுகளில் ஒன்றான கூகுள் அசிஸ்டன்ட்டில் செய்யப்பட்டு இருக்கும் புதிய மாற்றங்கள் மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க்: கூகுளின் வெளியீடுகளில் ஒன்றான கூகுள் அசிஸ்டன்ட்டில் செய்யப்பட்டு இருக்கும் புதிய மாற்றங்கள் மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மக்களுக்கு உதவி செய்வதற்காக அதுவே பிறருக்கு போன் செய்து பேசும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
நேற்று அமெரிக்காவில் நடந்த கூகுள் ''ஐஓ'' சந்திப்புதான் தற்போது டெக் உலகில் வைரல். இந்த மீட்டிங்கில் கூகுள் பல முக்கியமான அதிரடி முடிவுகளை அறிவித்தது.
ஆனால் எல்லாவற்றையும் விட மக்களை அதிகம் கவர்ந்தது கூகுள் அசிஸ்டன்ட்டில் செய்யப்பட்டு இருக்கும் புதிய மாற்றம்தான். பயனாளிகளுக்காக, அதுவே மக்களுக்கு போன் செய்து பேசும் வசதியை கொண்டு உள்ளது. இதன் செயல்பாடு மிகவும் அதிசயப்பட வைக்கும் அளவில் உள்ளது.
வரலாறு
இந்த கூகுள் அசிஸ்டன்ட் வந்து பல நாட்கள் ஆகி இருந்தாலும் மக்கள் இடத்தில் பெரிய வரவேற்பை பெறவில்லை. சில தோல்வி அடைந்த கூகுள் வெளியீடுகள், தயாரிப்புகள் போல மக்கள் இதையும் சில நாட்கள் பயன்படுத்திவிட்டு பின் அன் இன்ஸ்டால் செய்துவிட்டார்கள். ஆப்பிள் போனில் இருக்கும் சிரி அளவிற்கு இது பெரிதாக மக்களுடன் நெருக்கமாக இல்லை. இது தோல்வி அடைந்துவிட்டது என்றுதான் எல்லோரும் கருதினார்கள்.
பெரிய திட்டம்
ஆனால் கூகுள் வைத்து இருந்த திட்டமே வேறு என்று இப்போதுதான் தெரிகிறது. தற்போது இருக்கும் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்பம் மூலம் என்ன விஷயங்கள் எல்லாம் செய்ய முடியாதோ அதையெல்லாம் இதன் மூலம் செய்ய வைக்க வேண்டும் என்று கூகுள் இவ்வளவு நாள் உழைத்து இருக்கிறது. இதற்காக கூகுள் நிறுவனம், கூகுள் டியூப்லெக்ஸ் என்று தனி குழுவையே உருவாக்கி கடந்த சில வருடங்களாக வேலை செய்துள்ளது.
உழைப்பு
தற்போது வர இருக்கும் கூகுள் அசிஸ்டன்ட் அப்டேட்டில் உள்ள ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் அப்படியே மனிதர் போலவே சிந்திக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக சுந்தர் பிச்சை கூறியுள்ளார். இதற்காக அந்த ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ்க்கு தனி குரல், யோசிக்கும் திறன், மனிதர் எப்படி செயல்படுவார்கள் என்பதை எல்லாம் கற்றுக்கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். இந்த புதிய அப்டேட் இன்னும் சில நாட்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று அவர் கூறியுள்ளார்.
|
சூப்பர் வீடியோ
உதாரணமாக நேற்று நடந்த கூகுள் 'ஐஓ' சந்திப்பு நிகழ்வில், கூகுளின் சிஇஓ சுந்தர் பிச்சை இதை பற்றி எடுத்துரைத்தார். அவர் வெளியிட்ட வீடியோவில், கூகுள் அசிஸ்டன்ட் மூலம் ஒரு சலூன் கடைக்கு போன் செய்து முன்பதிவு செய்துள்ளனர். அதில் இந்த கூகுள் அசிஸ்டன்ட் அப்படியே மனித குரலில் மனிதர்கள் போலவே பேசி உள்ளது பின் முன்பதிவு செய்துள்ளது. மனிதர்கள் எந்த நேரத்தில் எப்படி குரலை மாற்றுவார்கள், கடைசி நேரத்தில் எப்படி திடீர் முடிவு எடுப்பார்கள் என்று இது யோசித்து பேசியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.