ஆரக்கிள் நிறுவனத்துக்கு எதிரான வழக்கு: எங்களது ஆன்ட்ராய்டு தொழில்நுட்பத்துக்கு கிடைத்த வெற்றி-கூகுள்
கலிபோர்னியா: ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களுக்கான மென்பொருள் உருவாக்கத்தில், காப்புரிமை மீறல் தொடர்பாக பிரபல கூகுள் நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்தது ஆரக்கிள் நிறுவனம். இந்த வழக்கின் தீர்ப்பு கூகுள் நிறுவனத்துக்கு ஆதரவாக வந்துள்ளது.
கலிபோர்னியா நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், "கூகுள் நிறுவனம் வேண்டுமென்றே, மீண்டும் மீண்டும் ஆரக்கிள் நிறுவனத்தின் ஜாவா அடிப்படையிலான அறிவுசார் சொத்துரிமையை அப்பட்டமாகக் காப்பியடிக்கிறது. இதற்கு உரிய தீர்வு காண வேண்டும்," என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனத்திடமிருந்து 5.6 பில்லியன் டாலர் கொடுத்து ஜாவா மென்பொருள் உரிமையைப் பெற்றது ஆரக்கிள். இணையதளம் சார்ந்த பல வசதிகளுக்கு ஜாவா தொழில்நுட்பம் அவசியம்.
ஆனால் கூகுள் நிறுவனம் எந்த வித காப்புரிமைத் தொகையும் தராமல் இந்த மொன்பொருள் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வருவதாக நீண்ட நாட்களாகக் குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்நிலையில் ஆரக்கிள் நிறுவனத்துக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு கூகுள் நிறுவனத்துக்கு ஆதரவாக வந்துள்ளது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆரக்கிள் நிறுவனத்தின் பொது வழக்கறிஞர் தொரியன் டாலே, ''மொபைல் சந்தையில் வேகமாக நுழைந்து தங்களை நிலை நிறுத்திக் கொள்ள எங்களது ஜாவா தொழில்நுட்பத்தை திருட்டுத்தனமாக ஆன்ட்ராய்டுக்கு கூகுள் நிறுவனம் பயன்படுத்தியுள்ளது'' என்று கூறியுள்ளார்.
இந்த தீர்ப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கூகுள் நிறுவனம், ''இது எங்களது ஆன்ட்ராய்டு தொழில்நுட்பத்துக்கு கிடைத்த வெற்றி. மேலும், ஜாவா தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்கள், மென்பொருள் தயாரிப்பாளர்கள் என நுகர்வோருக்கான புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்கும் அனைவருக்கும் ஒரு ஊக்குவிப்பாக அமையும்'' என்று தெரிவித்துள்ளது.