கூகுள் நிறுவனத்தின் புரோ கல்சரால் தினமும் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்.. முன்னாள் பெண் ஊழியர் பகீர்
கூகுள் நிறுவனத்தின் புரோ கல்சரால் தினமும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக அந்நிறுவனத்தின் முன்னாள் பெண் ஊழியர் குற்றம்சாட்டியுள்ளார்.
சான் ஃபிரான்ஸிஸ்கோ: கூகுள் நிறுவனத்தின் புரோ கல்சரால் தினமும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக அந்நிறுவனத்தின் முன்னாள் பெண் ஊழியர் குற்றம்சாட்டியுள்ளார்.
கூகுள் நிறுவனத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தவர் லோரிட்டா லீ.
இவர் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த போது சக ஊழியர்களால் நாள் தோறும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கடந்த பிப்ரவரி மாதம் கலிபோர்னியா நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.
கட்டிபிடிக்க வற்புறுத்தல்
புகாரின் படி தினமும் அவருக்கு சக ஆண் ஊழியர்களால் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில ஆண் ஊழியர்கள் அவரை மது அருந்திவிட்டு கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்தியதாகவும், சிலர் அறைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
டெஸ்க்கு அடியில்
கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது தன்னுடன் பணிபுரியும் ஊழியர் ஒருவர் அவரது டெஸ்க்கு அடியில் மறைந்திருந்ததாகவும் லீ தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
கை வைத்த ஊழியர்
அங்கு என்ன செய்கிறீர்கள் என கேட்டதற்கு பதிலளிக்க அந்த நபர் மறுத்து விட்டதாகவும் லீ தனது புகாரில் தெரிவித்துள்ளார். ஆனால் மறுநாள் அந்த நபர், தனது மார்பகத்தில் கையை வைத்ததாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
ஆதாரமற்ற புகார்
இதுகுறித்து நிர்வாகத்திடம் புகார் அளித்த போது கூகுளின் ஹெச்ஆர் டிப்பார்ட்மென்ட்டில் இருந்து ஆதாரமற்ற புகார்கள் என தனக்கு பதில் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்பிறகு அவர் எழுதும் கோட்களை சக ஊழியர்கள் அனுமதிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
பணிநீக்கம்
இதைத்தொடர்ந்தே தன்னுடைய வேலை சரியில்லை எனக்கூறி வேலையில் இருந்து நீக்கிவிட்டதாகவும் லீ என்ற பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
கூகுள் பதில்
இந்நிலையில் இந்த புகார் குறித்து நீதிமன்றத்தில் பதிலளித்துள்ள கூகுள் நிறுவனம், வேலை செய்யும் இடத்தில் நடக்கும் பாலியல் தொல்லைகளுக்கு தாங்கள் எதிரான கொள்கைகளை கொண்டிருப்பதாகவும், இதுபோன்ற புகார் குறித்து தீவிரமாக விசாரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.