கங்காரு தேசத்தில் ஈழத் தமிழர் பிரதிநிதிகளை பிராண்டிய மாஜி மத்திய அமைச்சர்
கங்காரு தேசத்துக்கு போன மாஜி மத்திய அமைச்சர் ஈழத் தமிழ் தலைவர்களை அவமதித்து பேசியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நம்மூர் அரசியல் தலைவர்களுக்கு இப்போது ட்விட்டர்தான் எல்லாமும்... ட்விட்டரில் கடுமையான விமர்சனங்களை வெளியிடுவதில் அந்த மாஜி அமைச்சருக்குதான் பிக்பாஸ் கோப்பை கிடைக்கும்.
அண்மையில் கங்காரு தேசத்துக்கு அந்த மாஜி அமைச்சர் சென்றிருக்கிறார். வெளிநாடுகளுக்கு எந்த இந்தியத் தலைவர்கள் வந்தாலும் அவர்களை ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள் சந்தித்து பேசுவது வழக்கமான ஒன்றுதான்.
அந்த வகையில் மாஜி அமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேச கங்காரு தேசத்து ஈழத் தமிழர் பிரதிநிதிகள் சென்றிருக்கின்றனர். அப்போது நடந்த உரையாடலில், ஈழத் தமிழர்கள் இந்தியாவுடன் நேசமாக விசுவாசமாக இருக்கவே விரும்புகிறோம் என வழக்கம்போல கூறியிருக்கின்றனர்.
ஆனால் மாஜியாரோ கடுப்பில், நீங்க ஏங்க இந்தியாவுக்கு விசுவாசமாக இருக்கனும்... நீங்க விசுவாசமாக இருக்க வேண்டியது இலங்கைக்குத்தான் என கூறியுள்ளார். மேலும் இலங்கையில் இருக்கும் தமிழர் தலைவர்களுடன் மட்டுமே நான் உட்பட இந்திய தலைவர்கள், அரசு தொடர்பு வைத்து கோரிக்கைகளை பரிசீலிக்கும்.
உங்களைப் போல வெளிநாட்டில் உள்ளவர்களுடன் பேச முடியாது; வேண்டுமானால் இலங்கைக்கு போய் அரசியல் செய்யுங்கள். உங்கள் கருத்துகளை நாங்களும் கேட்கிறோம் என கடுகாய் தாளித்திருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ந்து திரும்பினார்களாம் பிரதிநிதிகள். இதுதான் கங்காரு தேசத்து ஈழத் தமிழர்கள் மத்தியில் ஹாட்டாக ஓடும் பேச்சாக தற்போது உள்ளது.