கிரீஸ் நாட்டில் பயங்கர காட்டுத் தீ.. இதுவரை 74 பேர் பலி, 200 பேர் காயம்
கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீ விபத்தில் 74 பேர் பலியாகியுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
Recommended Video
ஏதென்ஸ்: கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் அருகே அட்டிகா பிராந்தியத்தில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 74 பேர் பலியாகியுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகர் அருகில் உள்ள அட்டிகா பிராந்தியத்தில் நேற்று மாலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. காட்டுத் தீ ஏற்பட்ட வனப்பகுதி கடற்கரையை ஒட்டியுள்ளது. வனப்பகுதியில் இரண்டு இடங்களில் பற்றிய தீ, மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவத் தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டமானது. இதனால், அப்பகுதியில் இருந்தவர்கள் காட்டுத் தீயில் சிக்கி 74 பேர் பலியாகியுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலியானவர்களில் இளைஞர்களும் குழந்தைகளும் அதிகம். தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த காட்டுத்தீ விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கீரிஸ் அரசு அச்சம் தெரிவித்துள்ளது. மேலும், ஆயிரக்கணக்கான வீடுகள், சுற்றுலா விடுதிகள், வாகனங்கள் காட்டுத்தீக்கு இரையாகியுள்ளன. காட்டுத்தீ ஏற்பட்ட பகுதியிலிருந்து தீயணைப்பு மீட்பு படையினரால் 700க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். நூற்றுக் கணக்கில் தீயணைப்பு வீரர்கள் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் கடற்கரையோரம் உள்ள மாதி என்ற கடற்கரையோர கிராமத்தில் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதால் காட்டுத்தீ வேகமாகப் பரவி பெரிய அளவில் சேதமடைந்துள்ளது. காட்டுத் தீ விபத்து நடந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு சாலைகள் மூடப்பட்டுள்ளன.
காட்டுத்தீ விபத்து குறித்து கிரீஸ் பிரதமர் அலெக்ஸிஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாங்கள் காட்டுத் தீயை அணைக்க எல்லா வகையிலும் முயற்சித்து வருகிறோம். ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மூலம் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன
போலந்து, பிரான்ஸ், ஜெர்மணி ஆகிய நாடுகள் காட்டுத் தீயை அணைக்க விமானங்கள், தீயணைப்பு வீரர்கள், வாகனங்களை அனுப்பி உதவியுள்ளன. அதேபோல, ஸ்பெயின், சைபரஸ் நாடுகள் உதவி செய்ய முன்வந்துள்ளன" என்று தெரிவித்தார்.
காட்டுத் தீ விபத்திலிருந்து மீட்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில், எல்லாப் பக்கமும் காட்டுத் தீயும் புகையும் சூழ்ந்ததால் எப்படி செல்வது என்று தெரியவில்லை. எல்லோரும் கடற்கரையை நோக்கி அலறியடித்துக்கொண்டு ஓடினோம்." என்று கூறினார்.
கிரீஸில் நடந்துள்ள இந்த காட்டுத் தீ விபத்து கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்து என்று கருதப்படுகிறது.