10 வயது சிறுமிக்கு 50 வயதான மாப்பிள்ளை... குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய பாக். போலீஸார்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பத்து வயது சிறுமிக்கு 50 வயதான முதியவருடன் நடைபெற இருந்த திருமணத்தை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
பாகிஸ்தானின் ஜகோபாபாத் அருகே உள்ள தாள் பகுதியில் கடந்த சனிக்கிழமை ஒரு குழந்தைத் திருமணம் நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, 50 வயது முதியவர் ஒருவர் 10 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்ள முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த 50 வயது முதியவரை போலீஸார் கைது செய்தனர்.அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், இந்த திருமணத்திற்காக குழந்தையின் தந்தை ரூ.4 லட்ச ரூபாய் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
பொதுவாக, இது போன்ற செயலில் ஈடுபடும் பெற்றோர்கள் ஏழ்மை நிறைந்தவர்கள். இதன் மூலம் தனது குழந்தைக்கு வசதியான வாழ்க்கை கிடைக்கும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர் என கூறப்படுகிறது. முக்கியமான விஷயம் என்னவென்றால், இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் குழந்தையின் பெற்றோர்களுக்கு அந்நாட்டில் வழங்கப்படும் தண்டனையானது ரூ.1000 அபராதமும், ஒரு மாத சிறை தண்டனையுமே என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் பெண்களுக்கு 15 வயதுக்கு முன்னதாகவே திருமணம் செய்து வைக்கும் சம்பவம் 3 சதவீதம் நடைபெறுகிறது. 21 சதவீத பெண்களுக்கு 18 வயது பூர்த்தியடைவதற்குள் திருமணம் செய்து வைக்கப்படுகிறது என யுனிசெப் அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன.