ப்ப்பா... மேக்கப் இல்லாத புது மனைவியைப் பார்த்து ஷாக்கான மாப்பிள்ளை!
அல்ஜீயர்ஸ்: திருமணத்தின் போது அதிக மேக்கப் போட்டு தன்னை அழகியாகக் காட்டி ஏமாற்றி விட்டதாக, புது மனைவி மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் அல்ஜீரியாவில் மாப்பிள்ளை ஒருவர். தன்னை ஏமாற்றியதற்காக மனைவியிடம் அவர் நஷ்ட ஈடும் கேட்டுள்ளார்.
சாதாரணமாகவே பெரும்பாலும் பெண்கள் மேக்கப் பிரியர்கள் தான். அதிலும், கல்யாணம் உள்ளிட்ட விஷேசங்கள் என்றால் கேட்கவா வேண்டும். தேவதை போல் தெரிய வேண்டும் என பியூட்டி பார்லர்களாக ஏறி இறங்கிக் கொண்டிருப்பர்.
ஆனால், இவ்வாறு அதிகப் படியான மேக்கப் போட்டதால் தன் வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளது ஒரு பெண்ணுக்கு.
இந்தச் சம்பவம் நடந்தது அல்ஜீரியாவில். திருமணம் முடிந்த மறுநாள் காலை உறக்கத்தில் இருந்து விழிந்த புது மாப்பிள்ளை தனது அறையில் யாரோ ஒரு பெண் புகுந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தனது மனைவியின் நகையைத் தான் அவர் திருட வந்துள்ளார் என நினைத்துள்ளார் அவர். ஆனால், பிறகு தான் தெரிந்தது வந்ததே அவர் மனைவி தான் என்று.
திருமணத்தன்று தேவதை போல் ஜொலித்த தன் மனைவி, மறுநாளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போனதால் குழம்பிப் போனார் அவர். இதனால், அவருக்கு உளவியல் பாதிப்பு ஏற்பட்டது.
திருமணம் மற்றும் அதற்கு முந்தைய சம்பிரதாயங்களின் போது மேக்கப் மூலம் தன்னைப் பேரழகியாக காட்டியுள்ளார் அப்பெண். இதனால், அவரது உண்மையான முகத்தை அவரது கணவரால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
இது தொடர்பாக நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார் அந்த மாப்பிள்ளை. மேலும், தன் மன உளைச்சலுக்கு தனது மனைவி நஷ்ட ஈடாக 20 ஆயிரம் டாலர் தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.