கெளதமாலா நிலச்சரிவு- 300க்கும் மேற்பட்டோர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்
கெளதமாலா: மத்திய அமெரிக்க நாடான கௌதமாலாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 300 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. நிலச்சரிவு மீட்பு நடவடிக்கைகளுக்காக மெக்சிகோவிலிருந்து மீட்புக்குழுவினர் கௌதமாலா விரைந்துள்ளனர்.
மத்திய அமெரிக்க நாடான கௌதமாலாவின் சான்ட்டா கடாரினா பினுலா என்ற பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை இரவு பெய்த தொடர்மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கிக்கொண்டனர்.
இந்த நிலச்சரிவில் உயிரிழந்த நூற்றுக்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிருடன் மீட்கப்பட்டவர்கள் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் மண் சரிவில் சிக்கியிருக்கலாம் என்றும், அவர்களில் பெரும்பாலானோர் உயிரிழந்திருக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
உயிரிழந்தவர்களுக்காக சிறப்பு பிரார்த்தனைகளும் நடந்து வருகின்றன. தொடர் மழை காரணமாக, நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மீட்புக்குழுவினர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மெக்சிகோவிலிருந்து சிறப்புக் குழுவினர் கௌதமாலா சென்றுள்ளனர். இக்குழுவினரின் உதவியுடன் மீட்புப் பணிகள் விரைவுபடுத்தப்படுள்ளன.