அஜ்மானில் சிறப்பாக பணியாற்றும் மருத்துவர்களுக்கு பாராட்டு
அஜ்மான்: அஜ்மானில் சிறப்பாக பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அஜ்மானில் கல்ப் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பான முறையில் இயங்கி வருகிறது. இங்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்ப மருத்துவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த மருத்துவமனையில் சிறப்பாக பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் பிரசாந்த் ஹெக்டே, மொகனத் முகம்மது சுல்தான், மஹ்மூத் பாரூக் முகம்மது எல்மாதி உள்ளிட்டோருக்கு கல்ப் மருத்துவ பல்கலைக்கழக தலைவர் தம்பே முகைதீன் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
இந்த விருதுகள் தங்களது பணியில் மென்மேலும் சிறப்பான வகையில் செயல்படுவதற்கு உறுதுணையாக இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.
தம்பே மருத்துவமனை துபாய், ஷார்ஜா, அஜ்மான் மற்றும் புஜேரா உள்ளிட்ட இடங்களில் மருத்துவமனைகளை நிர்வகித்து வருகிறது. இங்கு 20 நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 50-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. அஜ்மானின் முதலாவது தனியார் மருத்துவமனை என்ற பெருமையையும் இந்த மருத்துவமனை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
விருது வழங்கும் நிகழ்ச்சியில் இயக்குநர் அக்பர் முகைதீன் தம்பே உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.