ஷூட் பண்ணுங்க.. இல்ல, நான் சுட்ருவேன்.. நெதர்லாந்து டிவி சேனலுக்குள் புகுந்த நபர் அட்டகாசம்
ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்து நாட்டு அரசு தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் புகுந்து கைப்பற்ற முயன்ற ஆயுதம் ஏந்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெதர்லாந்து நாட்டின் ஹில்வெர்சம் நகரிலுள்ள அரசு தொலைக்காட்சி சேனலுக்குள் புகுந்த ஒரு நபர் ஊழியரிடம் ஒரு கடிதத்தை கொடுத்தார். அந்த கடிதத்தில், "இதை வாசித்ததும் அதிர்ச்சியடையாதீர்கள். சத்தம் போட்டு கத்தவோ, பிற ஊழியர்களை கூப்பிடவோ கூடாது. நான் பயங்கர ஆயுதங்களுடன்தான் வந்துள்ளேன்.
எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தால், உங்கலுக்கு எந்த சேதமும் ஏற்படாது. நான் ஹேக்கர்கள் குழுவை சேர்ந்தவன். என்னைப்போலவே 98 ஹேக்கர்கள் சைபர் அட்டாக் செய்ய தயாராக உள்ளனர். இந்த நாட்டின் எட்டு பகுதிகளில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. என்னை உங்கள் ஸ்டூடியோவுக்குள் அழைத்துச் சென்று பேச வைத்தால், அந்த தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்படும்" என்று கூறப்பட்டிருந்தது.
அதிர்ச்சியடைந்த அந்த ஊழியர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வந்து தொலைக்காட்சி சேனல் அலுவலகத்தில் இருந்த நபரை மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர். அவரிடமிருந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் நெதர்லாந்து நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.