கென்யா வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: இத்தாலிய பெண் கடத்தல்
நைரோபி: கென்யாவின் கிலிஃபி கவுன்ட்டியில் உள்ள வணிக வளாகத்திற்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்திய சிலர் 23 வயது இத்தாலிய பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர்.
கென்யாவின் கிலிஃபி கவுன்ட்டியில் உள்ள வணிக வளாகத்திற்குள் சிலர் துப்பாக்கிகளுடன் வந்து கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி ஏந்திய நபர்கள் தொண்டு அமைப்பில் பணியாற்றி வரும் இத்தாலியை சேர்ந்த சில்வியா காஸ்டான்சா ரொமானோ(23) என்ற பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர். துப்பாக்கி ஏந்திய நபர்கள் சோமாலி மொழி பேசியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில் சில்வியா பணியாற்றும் தொண்டு நிறுவனம் அவர் கடத்தப்பட்டதற்கு ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளது.
அந்த நபர்கள் எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள், சில்வியாவை ஏன் கடத்தினார்கள் என்பது தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.