பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து முகாமில் துப்பாக்கிச்சூடு: 7 போலீசார் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து அளிக்கும் முகாம் நடந்த இரண்டு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 7 போலீசார் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து அளிக்கும் முகாம் இன்று முதல் துவங்கியுள்ளது. ஆரங்கி நகரில் போலியோ சொட்டு மருந்து அளிக்கும் முகாம் நடந்து கொண்டிருக்கையில் அங்கு 4 பைக்குகளில் வந்த 8 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 4 போலீசாரை சுட்டுக் கொன்றனர்.
அங்கிருந்து கிளம்பிய அந்த 8 பேர் அருகில் உள்ள பகுதியில் நடந்த முகாமிற்கும் சென்று 3 போலீசாரை சுட்டுக் கொலை செய்தனர். அவர்கள் போலியோ சொட்டு மருந்து அளித்த யாரையும் குறிவைக்கவில்லை.
பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து அளிக்க பல இஸ்லாமிய அமைப்புகள், தாலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் போலியோ சொட்டு மருந்து அளிப்பவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது வழக்கமாகிவிட்டது. போலியோ சொட்டு மருந்து வழங்குவது இஸ்லாத்திற்கு எதிரானது என்று சிலர் கூறி வருகின்றனர்.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் குவெட்டாவில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 12 போலீசார் மற்றும் ஒரு துணை ராணுவப்படை வீரர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.