பாரீஸ் ஆடை ஷோரூமில் கொள்ளையர்களிடம் பிணை கைதிகளாக பிடிபட்ட 18 பேரும் விடுதலை!
பாரீஸ்: பாரீஸ் நகரிலுள்ள ஆடை ஷோரூமுக்குள் பகுந்த ஆயுதம் தாங்கிய கொள்ளை கும்பல், அங்கு சுமார் 18 பேரை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். இருப்பினும், பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைக்கு பயந்து அவர்களை கும்பல் ரிலீஸ் செய்துவிட்டது.
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் புறநகர் பகுதியில் ப்ரிமார்க் என்ற பெயரிலான பிரபல ஆடை ஷோரூம் இயங்கி வருகிறது. இங்கு இன்று காலை, சுமார் 3 பேர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்து, ஷோரூம் ஊழியர்கள் சுமார் 18 பேரை பிணையக் கைதிகளாக பிடித்தனர்.
பிணையக் கைதி ஒருவர் அனுப்பிய செல்போன் மெசேஜால் இத்தகவல் வெளியே வந்தது. இதையடுத்து சம்பவ பகுதியை பிரான்ஸ் அதிரடிப்படை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு ஷோரூமை சுற்றி வளைத்தது.
ஏற்கனவே பாரீசில் தீவிரவாதிகள் இதுபோன்ற தாக்குதலை நிகழ்த்தியிருந்ததால், துப்பாக்கி ஏந்திய கும்பலை சுட்டுக்கொல்ல பாதுகாப்பு படையினர் தயாராகினர். நிலைமை மோசமாவதை உணர்ந்த அந்த கும்பல், பிணைய கைதிகள் அனைவரையும் விடுவித்தது.
கொள்ளை கும்பலின் கைவரிசைதான் இது என்று போலீசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். அதேநேரம், அவர்கள் கைது செய்யப்பட்டனரா, அல்லது கூட்டத்தோடு தப்பிவிட்டனரா என்ற தகவலை உறுதிப்படுத்தவில்லை.