ஹோட்டலில் பரிமாறப்பட்ட நர மாமிசம்.. நைஜீரியாவைக் கலக்கிய பரபரப்பு பொய்ச் செய்தி!
அனம்பரா, நைஜீரியா: நைஜீரியாவில் ஒரு ஹோட்டலில் மனிதக் கறி பரிமாறப்படுவதாக வந்த தகவலின் பேரில் அந்த ஹோட்டலில் போலீஸார் ரெய்டு நடத்தியபோது மனிதத் தலைகள் ரத்தம் சொட்டச் சொட்ட இருந்ததை கண்டு அதிர்ந்தாக வந்த தகவல் பொய்யானது என்று அந்த நாட்டு காவல்துறை கூறியுள்ளது.
இதுகுறித்து பிபிசி ஸ்வாஹிலி செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் அந்த செய்தியை உடனடியாக போலீஸார் மறுத்து விட்டனர். இது தவறான செய்தி என்று போலீஸார் விளக்கியுள்ளனர். இதையடுத்து பிபிசி நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
முன்னதாக பிபிசி ஸ்வாஹிலி வெளியிட்டிருந்த செய்தியில், அனம்பரா என்ற நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் மனிதக் கறி பரிமாறப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து அந்த ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனவர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து ஹோட்டலில் சோதனையிட்டனர். அப்போது ரத்தம் சொட்டச் சொட்ட மனிதத் தலைவர்கள் அங்குள்ள சமையல் கூடத்தில் இருந்தன. அவை அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேலும் மனித உடலை துண்டு துண்டாக வெட்டி, சமைக்கப்பட்டு பரிமாறுவதற்காக வைக்கப்பட்டிருந்தன. மேலும் சில துப்பாக்கிகளும், பல செல்போன்களும் ஹோட்டலில் சிக்கின.
இதைப் பார்த்து அதிர்ந்து போன போலீஸார் ஹோட்டலை மூடி சீல் வைத்தனர். இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் தொடர்பாக 10 பேரையும் கைது செய்தனர் என்று அந்த செய்தி கூறியிருந்தது.
இது நைஜீரியாவில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி விட்டது. நைஜீரிய காவல்துறை தலைவர் செய்தித் தொடர்பாளர் உசே எஸே இதுகுறித்து விளக்கம் அளிக்கையில், இது தவறான செய்தி, பொய்ச் செய்தி. இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. ஆனால் நடந்ததாக பிபிசி வெளியிட்டுள்ள செய்தி எங்களை அதிர வைத்துள்ளது. இது உண்மையல்ல என்றார்.
ஆனால் இதுபோல செய்தி வருவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் கூட சில முறை செய்திகள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.