விசா கொள்கையில் அமெரிக்கா திருத்தம்.. கம்ப்யூட்டர் புரோகிராமர்களுக்கு இனி எச்-1 பி விசா இல்லை
இந்திய நிறுவனங்களுக்குத்தான் அதிகப்படியான பாதிப்பு ஏற்படும். அதிக ஊதியத்திற்கு அமெரிக்க பணியாளர்களை நியமித்தால் அது இந்த நிறுவனங்களின் லாபத்தில்தான் பாதிப்பை ஏற்படுத்தும்.
வாஷிங்டன்: அமெரிக்க அரசின் திருத்தம் செய்யப்பட்ட விசா கொள்கையின்படி கம்ப்யூட்டர் புரோகிராமர்கள் இனி எச்-1பி விசா பெறும் தகுதியை இழக்கிறார்கள்.
கடந்த 2000ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட விதிகளில் திருத்தம் செய்து கணினி துறை சார்ந்த பதவிகளுக்கான எச் 1-பி விசா கொள்கையை விளக்கக் குறிப்பை அமெரிக்க அரசு கடந்த 31ம் தேதி வெளியிட்டது.
இதன்படி கம்ப்யூட்டர் புரோகிராமர்கள் இனி எச்-1பி விசா பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் நீங்கள் அறிய வேண்டிய அம்சங்கள் இவைதான்:
விசா இல்லை
சாப்ட்வேர் தொழிலின் ஆரம்பகட்ட பணியிடம் கம்ப்யூட்டர் புரோக்ராமர். எனவே இனிமேல் அந்த வேலை பார்ப்போர் சிறப்பு தொழில் பிரிவின்கீழ் விசா பெற தகுதி பெற மாட்டார்கள்.
கூடுதல் சிறப்பு
எச்1-பி விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது, விதிமுறைகளில் உள்ளதன்கீழ், கூடுதலாக சிறப்பு திறமை உள்ளது என்பதை குறிப்பிட வேண்டும், அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
அதிக ஊதியம்
புரோக்ராம் மட்டத்திலான ஊழியர்களை பணிக்கு எடுக்கும் நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படும். ஏனெனில் இதே அளவுக்கான பணி திறமை கொண்ட அமெரிக்கர்களுக்கு அதிக ஊதியம் கொடுக்க வேண்டிய நிலை அந்த நிறுவனங்களுக்கு ஏற்படும்.
இந்திய ஐடி நிறுவனங்கள்
பொதுவாக எடுத்துப் பார்த்தால் இந்திய நிறுவனங்களுக்குத்தான் அதிகப்படியான பாதிப்பு ஏற்படும். அதிக ஊதியத்திற்கு அமெரிக்க பணியாளர்களை நியமித்தால் அது இந்த நிறுவனங்களின் லாபத்தில்தான் பாதிப்பை ஏற்படுத்தும்.
வழக்கு தொடுக்க ரெடி
அமெரிக்கா கொண்டுவந்துள்ள இந்த புதிய விதிமுறையை கோர்ட்டில் எதிர்க்க வக்கீல்கள் தயாராகி வருகிறரார்கள். 2018ம் ஆண்டுக்கான விசா விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாளுக்கு சரியாக ஒரு நாள் முன்பாக, மார்ச் 31ம் தேதி புதிய உத்தரவை அமெரிக்க அரசு பிறப்பித்துள்ளது. இது போதிய கால அவகாசம் கொடுக்காத செயல் என்பதால் அதை முன்வைத்து நீதிமன்றத்திற்கு செல்ல உள்ளனர்.