1000 ஹிரோஷிமாக்களை அழிக்கும் வல்லமை படைத்தது வட கொரியா சோதித்த ”ஹைட்ரஜன் குண்டு”!
டோக்கியோ: வடகொரியா சோதித்துள்ள ஹைட்ரஜன் குண்டானது ஹிரோஷிமாவை அழித்ததை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது என்று அணு வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜப்பானில் உள்ள ஹிரோஷிமாவில் இரண்டாம் உலக போரின்போது 1945 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 6 ஆம் தேதி அமெரிக்கா போட்ட "லிட்டில் பாய்" என்னும் அணுகுண்டை உலகம் மறக்கவே முடியாது.
இந்த அணுகுண்டால் அந்த நகரமே உருக்குலைந்து போனது. பல்லாயிரக்கணக்கானோர் பரிதாபமாக பலியாகினர்.
ஆயிரம் மடங்கு சக்தி:
இந்த அணுகுண்டை விட வடகொரியா நேற்று வெடித்து சோதித்ததாக கூறப்படுகிற ஹைட்ரஜன் குண்டு ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது என அணு வல்லுனர்கள் கூறுகின்றனர்.
சூரிய வெடிப்பு:
மேலும், இது தொடர்பாக டோக்கியோவில் உள்ள மீஜி காக்குயின் பல்கலைக்கழகத்தின் சர்வதேச அரசியல் மற்றும் அமைதி ஆராய்ச்சித்துறை பேராசிரியர் டாக்காவ் டாக்காஹாரா கூறுகையில், "சூரியனில் என்ன நடக்கிறது என்பதை சிந்தித்து பாருங்கள்.
மீப்பெரும் ஆற்றல்:
கோட்பாட்டில் அதன் செயல்பாடுகள் எல்லைகள் அற்றது. அதன் ஆற்றல், மிகப்பெரிய அளவிலானது. அந்த வகையில், ஹைட்ரஜன் குண்டின் தொழில்நுட்பம் மிகவும் அதிநவீனமானது.
அச்சுறுத்தும் சோதனை:
இது மிகவும் அச்சுறுத்தலானது. இதை கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணையில் பொருத்தக்கூடிய அளவுக்கு சிறிய வடிவில் தயாரிக்க முடியும்" என குறிப்பிட்டார்.
ஆற்றல் வெளிப்பாடு அதிகம்:
அணுகுண்டுகளை பொறுத்தமட்டில் அவை அணுப்பிளவின் அடிப்படையில் செயல்படுவதாகும். ஆனால் ஹைட்ரஜன் குண்டு, அணு கருக்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து மிகப்பெரும் ஆற்றலை வெளிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.