ட்ரம்ப் அரசு குடைச்சல்.. அமெரிக்காவுக்கு குட்பை.. கனடாவிற்கு ஷிப்ட்டாகும் இந்திய ஐடி பணியாளர்கள்!
டொரான்டோ: அமெரிக்க அரசு எச்-1பி விசா விவகாரத்தில், மிகுந்த கறார், காட்டுவதால் இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் பலரின் பார்வை, கனடா நாடு பக்கமாக திரும்ப ஆரம்பித்துள்ளது.
அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு, 'அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை' என்ற கொள்கையைக் கொண்டு வந்தார்.
இதன் காரணமாக வெளிநாட்டினருக்கு, அமெரிக்காவில் குடியுரிமையில் முன்னுரிமை வழங்கக்கூடிய, எச்-1பி விசா விதிகளில் பல்வேறு கெடுபிடிகளை அமல்படுத்தினார்.
2 நாட்கள் அமைதிக்கு பிறகு இலங்கையில் மீண்டும் இன்று குண்டு சத்தம்! தியேட்டர் அருகே பரபரப்பு
டொனால்ட் ட்ரம்ப்
ஆண்டுக்கு 85,000 எச்-1பி விசாக்களை, அமெரிக்கா வழங்கி வருகிறது. இதில் பெரும்பான்மையான விசாக்களை பெறுவது இந்தியாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள்தான். ஆனால் டொனால்டு டிரம்ப் அரசின், புதிய கட்டுப்பாடுகள் காரணமாக, இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அமெரிக்க நிரந்தர குடியுரிமை பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன.
அழைக்கும் கனடா
"ஆண்டவன் ஒரு கதவை அடைத்தால், இன்னொரு கதவைத் திறப்பான்" என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லவா.. அது இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் பொருந்தக்கூடிய பழமொழிதான் போலும். ஏனெனில் அமெரிக்கா கதவை சாத்தினாலும், கனடா இருகரம் கூப்பி இந்தியர்களை வரவேற்கிறது என்று தான் சொல்லவேண்டும். கனடா நாட்டில் உலகளாவிய திறமை ஸ்ட்ராட்டர்ஜி (Global Skills Strategy)என்ற பெயரில், 2017 ஆம் ஆண்டில் ஒரு செயல் திட்டம் அந்த நாட்டு அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது. இது, இந்தியர்களுக்கு வரப்பிரசாதம் என்று சொல்ல வேண்டும்.
நிரந்தர குடியுரிமை
கனடா நாட்டின் இந்த புதிய திட்டத்தின்படி, 2018 ஆம் ஆண்டில் 3 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு, நிரந்தர குடியுரிமை கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதேபோல, 2019 ஆம் ஆண்டில் 3 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க கனடா அரசு முன் வந்துள்ளது. இதன் காரணமாக, இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், கனடாவை நோக்கி தங்கள் பார்வையைத் திருப்ப தொடங்கியுள்ளனர்.
கனடா செல்லும் இந்தியர்கள்
ஸ்டேக்ரேப்ட், நிறுவனத்தின் நிறுவனர் வர்திகா மானஸ்வி, இது பற்றி கூறுகையில், அமெரிக்காவில் பணியாற்றி விட்டு கனடாவுக்கு குடிபெயர விரும்புவோரின் விண்ணப்பங்களுக்கு, வேகமாக முன்னுரிமை கொடுத்து பரிசீலிக்கப்படுகின்றன. இதன் காரணமாக, அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்றுள்ள இந்தியர்களும் கூட, கனடா நாட்டுக்கு செல்வதற்கு விரும்புகிறார்கள். அமெரிக்காவிலிருந்து கனடா செல்ல கூடிய எச்-1 பி விசாதாரர்களில், மூன்றில் ஒரு பங்கினர், இந்தியர்கள் என்றார்.
நிரந்தர குடியுரிமை
எச்-1பி விசா காலம் நீட்டிப்பு செய்யப்படுமா, இல்லையா என்பது தொடர்பாக, ஸ்திரமற்ற தன்மை இருப்பதன் காரணமாக, இதுபோல தொழிலாளர்கள் இடம் பெயர்கிறார்கள். இந்தியாவைச் சேர்ந்த பிரபல நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, டெக் மகிந்திரா, ஹெச்சிஎல், போன்றவையும் கனடா நாட்டில் தங்களது நிறுவனங்களை விரிவுபடுத்தி வருகின்றன. மிகத் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு மூன்று ஆண்டுகளில், நிரந்தர குடியுரிமை வழங்குகிறது கனடா. அதேநேரம் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை (கிரீன் கார்டு) பெறுவதற்கு, இந்தியர்கள் 10 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய தேவை உள்ளது, என்பதும் கனடாவை நோக்கி இந்தியர்கள் கவனம் செலுத்துவதற்கு ஒரு முக்கியமான காரணம்.