மோடி-ட்ரம்ப் கூட்டு சேர்ந்து சிறைபிடித்து விட்டனர்.. கதறும் பாக். தீவிரவாதி ஹபீஸ் சயீத்!
லாகூர்: இந்திய பிரதமர் மோடிக்கும், அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும் நட்பு உள்ளதாகவும், மோடியின் விருப்பத்தை நிறைவேற்றவே பாகிஸ்தான் தன்னை வீட்டுக் காவலில் வைத்துள்ளதாகவும், தீவிரவாதி ஹபீஸ் சயீத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஜமாத் உத் தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் மீது 2008ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஹபீஸ் சயீத், லாகூரில் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் இவரது தீவிரவாத அமைப்புக்கு விரைவில் தடை விதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் சட்ட அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட சயீத், 6 மாத காலத்திற்கு வீட்டு சிறையில் வைக்கப்படுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே சயீத் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்காவில் புதிய அதிபராக பொறுப்புக்கு வந்துள்ள டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின்பேரில் பாகிஸ்தான் அரசு தன்னை கைது செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்திய பிரதமர் மோடி தனக்கு ட்ரம்பிடம் உள்ள நட்பை பயன்படுத்தி, பாகிஸ்தான் அரசை பணிய வைத்துவிட்டதாகவும், மோடி-ட்ரம்ப்பின் நட்பு காரணமாகவே தனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி பேசியுள்ளார்.