மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத்துக்கு 11 வருசம் ஜெயில்
இஸ்லாமாபாத்: மும்பையில் 26/11 (2008) தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத்துக்கு தீவிரவாதத்துக்கு நிதி திரட்டிய வழக்குகளில் 11 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடியாக இன்று உத்தரவிட்டுள்ளது.
லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவனான ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் இருந்தபடி இந்திய மண்ணில் தீவிரவாத செயல்களை ஊக்குவித்து வருகிறார். மும்பை குண்டுவெடிப்பு, மும்பை தாக்குதல் உள்பட இந்தியாவில் நடந்த பல தீவிரவாத தாக்குதலுக்கு இவரே மூளையாக செயல்பட்டதாக இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை ஹபீஸ் சயீத்தை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்துள்ளது.
ஹபீஸ் சயீத்தின் நாசகரமான திட்டத்தால் தான் மும்பையில் 2008ம் ஆண்டு மும்பையில் அரபிக்கடல் வழியாக ஊடுருவிய தீவிரவாதிகள் கண்ணில் பட்ட அத்தனை மக்களையும் கொடூரமாக சுட்டுத்தள்ளினார்கள். இந்த கோர தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தீவிரவாதிகளை டெல்லியில் இருந்து வந்த தேசிய பாதுகாப்பு படையினர் நீண்ட போராட்டத்துக்கு பின் சுட்டுக்கொன்றனர்.
ஹபீஸ் சயீத் மீது வழக்கு
இந்த கொடூர சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது ஹபீஸ் சயீத் தான் என பாகிஸ்தானிடம் இந்தியா முறையிட்டது. ஆனால் ஹபீஸ் சயீத்தை ஒப்படைக்க மறுத்ததுடன் போதிய ஆதாரம் இல்லை என்று கூறியது. மேலும் ஆதாரம் வேண்டும் என்று இந்தியாவை பாகிஸ்தான் அலைகழித்தது. மேலும் அங்கேயே ஒரு வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகிறது.
கருப்பு பட்டியல்
இதற்கிடையே தீவிரவாதத்திற்கு தீவிரவாதிகள் நிதி திரட்டுவது பாகிஸ்தானில் அதிகரித்து வரும் காரணத்தால் அதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கு சர்வதேச தீவிரவாத தடுப்பு அமைப்பு கெடுவிதித்துள்ளது. நடவடிக்கை எடுக்காவிட்டால் பாகிஸ்தான் கருப்பு பட்டியலில் வைக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அப்புறம் உலக நாடுகளிடம், வங்கிகளிடம் நிதி கேட்க பாகிஸ்தானால் முடியாது.
ஹபீஸ்க்கு ஜெயில்
இந்த நிலையில்தான் தீவிரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக லாகூர் மற்றும் குஜ்ரன்வாலாவில் தொடரப்பட்ட இரண்டு வழக்கில் ஹபீஸ் சயீத்துக்கு 11 வருடம் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹபீஸ் சயீத் மீது பாகிஸ்தானில் தீவிரவாத செயல்களுக்காக 23 வழக்குகள் உள்ளது. ஆனால் இதுவரை சுதந்திரமாக சுற்றி வந்தார்.
பல குற்றச்சாட்டுகள்
சர்வதேச நாடுகளின் அழுத்தத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஹபீஸ் சயீத் மீது தீவிரவாத குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருந்தது. பாகிஸ்தானின் பஞ்சாப் காவல்துறையின் பயங்கரவாத தடுப்புத் துறையால் தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் அவர் மீது பயங்கரவாத நிதி மற்றும் பண மோசடி தொடர்பான பல குற்றங்கள் சுமத்தப்பட்டன. இதன்படியே ஹபீஸ் சயீத்துக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 11 வருடம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
11 மாதம் சிறை
முன்னதாக 2017 ஆம் ஆண்டில், ஹபீஸ் சயீத் மற்றும் அவரது நான்கு உதவியாளர்கள் பாகிஸ்தான் அரசாங்கத்தால் பயங்கரவாத சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டனர். ஆனால் பஞ்சாப் நீதிமன்றம் சிறைவாசத்தை மேலும் நீட்டிக்க மறுத்த காரணத்தால் கிட்டத்தட்ட 11 மாதங்களுக்குப் பிறகு ஹபீஸ் சயீத் உள்பட அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.