இம்ரான் கான் அமெரிக்கா பயணம்.. மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயித் பாகிஸ்தானில் கைது
இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாத ஹபீஸ் சயித் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார்.
பயங்கரவாத இயக்கமான ஜமாஉத் தவாவின் தலைவர் ஹபீஸ் சயீத். கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பை வெடிகுண்டு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டார்.
இந்த நிலையில் ஹபீஸ் சயித்தை கைது செய்யாமல் பாகிஸ்தான் பாதுகாத்து வருவதாக உலக நாடுகள் குற்றம்சாட்டின. கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி புல்வாமா தாக்குதலை ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு நடத்தியதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதனால் பாகிஸ்தான் மீது உலக நாடுகள் கடுங்கோபத்தில் இருந்தன. அதன் விளைவாக மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயித் தலைமையிலான ஜமாத் உத் தவா தீவிரவாத அமைப்புக்கும் அவர் நடத்தி வந்த பலாஹ் இ இன்சானியத் அமைப்புக்கும் பிப்ரவரி 21-ஆம் தேதி பாகிஸ்தான் தடை விதித்தது.
ஆனால் சொன்னது போல் இந்த அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தடை விதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து உலக நாடுகளின் நெருக்கடி, அழுத்தம் காரணமாக மும்பை தாக்குதலில் முக்கியக் குற்றவாளி ஹபீஸ் சயித் உள்பட 12 பேர் மீது தீவிரவாத செயல்களுக்கு நிதி வசூலித்தல் பிரிவில் வழக்குகளை பதிவு செய்து பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது.
இந்த நிலையில் லாகூரில் ஹபீஸ் சயித்தை பாகிஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு கைது செய்தது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.