வெள்ளை உடை தரித்து மெக்காவில் இருந்து மினாவுக்கு கிளம்பிய ஹஜ் யாத்ரீகர்கள்
மினா: ஹஜ் புனிய பயணத்தின் துவக்கமாக 1.5 லட்சம் இந்தியர்கள் உள்பட ஆயிரக்கணக்கான உலக முஸ்லீம்கள் இன்று மெக்கா நகரில் இருந்து மினாவுக்கு கிளம்பிச் செல்லத் துவங்கினர்.
உலக முஸ்லீம்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகரில் கூடியுள்ளனர். இதில் 1.5 லட்சம் இந்தியர்களும் அடக்கம். இந்நிலையில் புனித பயணத்தின் துவக்கமாக யாத்ரீகர்கள் மெக்கா நகரில் இருந்து இன்று மினா நகருக்கு கிளம்பிச் செல்லத் துவங்கினர்.
யாத்ரீகர்கள் வெள்ளை ஆடை தரித்து கூட்டம் கூட்டமாக மினா நகரை நோக்கி சென்றனர். வழிநெடுகிலும் அவர்கள் லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்(இறைவா உன்னிடம் வந்து கொண்டிருக்கிறோம்) என்று கூறிக் கொண்டே சென்றனர்.
ஹஜ் பயணத்தின்போது ஆண்களும், பெண்களும் வெள்ளை ஆடை அணிந்திருப்பது வழக்கம். மெக்கா நகரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மினா நகருக்கு பலர் நேற்று இரவே கிளம்பிவிட்டனர். பலர் இன்று காலை தொழுதுவிட்டு கிளம்பினர். பலர் பேருந்துகளில் சென்றனர். சிலர் நடந்து சென்றனர்.
நடக்க முடியாத வயதான யாத்ரீகர்கள் சக்கர நாற்காலியில் சென்றனர். மினா நகரை அடைந்த பல யாத்ரீகர்கள் ஹஜ் பயணத்தை சாத்தியமாக்கிய இறைவனுக்கு நன்றி தெரிவித்து அழுதனர். யாத்ரீகர்கள் இன்றைய இரவை மினா நகரில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் கழிப்பார்கள். அதன் பிறகு நாளை அரபாத் மலைக்கு கிளம்பிச் செல்வார்கள்.
மினா நகரில் யாத்ரீகர்களுக்காக 1 லட்சத்து 60 ஆயிரம் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.