5 நாட்கள் ஹஜ் புனித பயணம் இன்று மெக்காவில் இருந்து துவக்கம்
மெக்கா: சுமார் 1.5 லட்சம் இந்தியர்கள் ஆயிரக்கணக்கான உலக முஸ்லீம்களோடு சேர்ந்து இன்று மெக்காவில் இருந்து மினாவுக்கு சென்று தங்களின் ஹஜ் புனித பயணத்தை துவங்க உள்ளனர்.
இன்று சூரியன் அஸ்தமனமான பிறகு இஸ்லாமிய காலண்டர்படி துல்ஹஹ் மாதத்தின் 8வது நாள் பிறக்கும். இதையடுத்து சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் கூடியிருக்கும் 1.5 லட்சம் இந்தியர்கள் உள்பட ஆயிரக்கணக்கான உலக முஸ்லீம்கள் அந்த நகரில் இருந்து புனித நகரான மினாவுக்கு கிளம்புவார்கள். இதன் மூலம் அவர்கள் தங்களின் ஹஜ் பயணத்தை துவங்க உள்ளனர்.
மெக்காவில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் மினா உள்ளது. பெரும்பாலான யாத்ரீகர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க இன்று நள்ளிரவுக்கு பிறகு மெக்காவில் இருந்து கிளம்புவார்கள். 5 நாட்கள் புனித பயணம் வரும் சனிக்கிழமை சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியுடன் நிறைவடையும்.
மினா வரும் யாத்ரீகர்கள் தங்க சவுதி அதிகாரிகள் ஆயிரக்கணக்கான கூடாரங்களை அமைத்துள்ளனர். மினா நகரில் தங்கும் யாத்ரீகர்கள் அன்றைய இரவு பொழுதை குர்ஆன் ஓதி கழிப்பார்கள். ஹஜ் பயணத்தையொட்டி 1 லட்சம் பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளது சவுதி அரசு.
5 நாட்கள் புனித பயணத்தை மேற்கொள்ள 15 லட்சம் பேர் மெக்கா வந்துள்ளனர். மெக்கா மற்றும் மதினா நகரில் 5 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 11ம் தேதி மெக்காவில் உள்ள பெரிய மசூதியில் கிரேன் முறிந்து விழுந்த விபத்தில் 11 இந்தியர்கள் உள்பட 107 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.