இஸ்ரேலுக்கு உளவு... 2 பெண்கள் உள்பட 18 பாலஸ்தீனியர்களை சுட்டுக் கொன்ற ஹமாஸ்!
காஸா, பாலஸ்தீனம்: இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக 18 பேரை நடு ரோட்டில் நிறுத்தி வைத்து பொதுமக்கள் முன்னிலையில் சுட்டுக் கொன்றுள்ளது ஹமாஸ் இயக்கம்.
ஏற்கனவே இஸ்ரேல் தாக்குதலால் சிதிலமடைந்து நிற்கும் காஸா மக்கள், இந்த சம்பவத்தால் மேலும் பீதியாகியுள்ளனர். 18 பேரையும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை தரும் வகையில் நடுரோட்டில் நிற்க வைத்து சரமாரியாக சுட்டுக் கொன்றுள்ளனர் ஹமாஸ் அமைப்பினர்.
சுட்டுக் கொல்லப்பட்ட 18 பேரில் 2 பேர் பெண்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளதால் பரபரப்பு கூடியுள்ளது.
மசூதிக்கு வெளியே
இவர்களில் 7 பேரை காஸா சிட்டி மசூதிக்கு அருகே வரிசையாக சுவர் ஓரமாக நிற்க வைத்து கைகளையும், கண்களையும் கட்டி விட்டுச் சுட்டுக் கொன்றுள்ளனர். இதை மசூதியில் தொழுகையை முடித்து விட்டு வெளியே வந்தவர்கள் பார்த்து அதிர்ந்து உறைந்து போனார்கள்.
காஸா போலீஸ் நிலையம் அருகே
மற்ற 11 பேரும் காஸா நகர தலைமை போலீஸ் அலுவலத்தில் வைத்து சுட்டுக் கொன்றுள்ளனர்.
மற்றவர்களுக்கும் இதே கதிதான்
இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், பாலஸ்தீனத்திற்கும், ஹமாஸுக்கும், காஸாவுக்கும் துரோகம் செய்யும் எவரையும் விட மாட்டோம். மற்றவர்களுக்கும் இதே தண்டனை விரைவில் கிடைக்கும். இப்போதைய சூழ்நிலைதான் எங்களை இந்த முடிவை எடுக்க வைத்துள்ளது என்று கூறயுள்ளார் ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த அலி ரை.
ஹமாஸ் தலைவர்கள் கொலையால்
இந்த சம்பவத்திற்கு முதல் நாள்தான் ஹமாஸ் இயக்கத்தின் முக்கியமான மூன்று தலைவர்களை இஸ்ரேல் படையினர் சரமாரியான ஏவுகணைத் தாக்குதலில் கொன்றனர். இதற்கு இந்த 18 பேரும்தான் உளவு சொன்னதாக புகார்கள் வந்தன. இதையடுத்தே இந்த 18 பேரையும் கொன்று குவித்துள்ளனர் ஹமாஸ் இயக்கத்தினர்.
பாலஸ்தீனியர்களை ஆசை காட்டி இழுக்கும் ஷின் பெட்
இஸ்ரேல் இவ்வளவு கொடூரமாக தாக்கிய போதிலும் கூட இஸ்ரேலுக்கு உளவு சொல்வோரும் பாலஸ்தீனத்தில் இருக்கத்தான் செய்கின்றனர். இவர்களை ஒருங்கிணைத்து தகவல்களைப் பெறும் பணியை இஸ்ரேல் பாதுகாப்பு ஏஜென்சியான ஷின் பெட் செய்கிறதாம்.