ரோபோ கைகளால் ‘செல்ஃபி’ எடுத்து... செவ்வாயில் ஓராண்டை நிறைவு செய்த ‘க்யூரியாசிட்டி’!
நியூயார்க்: அமெரிக்காவின் நாசா சார்பில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட க்யூரியாசிட்டி விண்கலம் நேற்றுடன் அக்கிரக நாள் கணக்குப்படி ஒரு வருடத்தை பூர்த்தி செய்துள்ளது.
சிகப்பு கோளான செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு 'க்யூரியாசிட்டி' விண்கலத்தை அனுப்பியது. பூமியில் இருந்து ஏவப்பட்டு சுமார் 8 மாத பயணத்திற்குப் பின்னர் கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி செவ்வாயில் தரையிறங்கியது க்யூரியாசிட்டி விண்கலம்.
தற்போது, அங்கிருந்த படி அக்கிரகத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது க்யூரியாசிட்டி.
ஆய்வு...
செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பின் அங்கு உயிர்கள் வாழ முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறது க்யூரியாசிட்டி விண்கலம்.
செவ்வாயில் ஏரிப்படுகை...
அங்குள்ள பாறைகளை குடைந்ததன் மூலம் அதில் ஏரிப்படுகை ஒன்று இருந்ததையும், சிறிதளவு நீர் இருந்ததையும் இதுவரை கண்டுபிடித்து புகைப்பட ஆதாரத்துடன் அனுப்பியுள்ளது இந்த விண்கலம்.
ஒராண்டு நிறைவு...
பூமியில் ஓராண்டு என்பது 365 நாட்கள், ஆனால், செவ்வாய் கிரகத்தில் 687 நாட்கள் என்பது ஒரு வருடமாகக் கணக்கிடப் படுகிறது. அதன்படி, நேற்றுடன் செவ்வாய் கிரகத்தில் தனது ஓராண்டை நிறைவு செய்துள்ளது க்யூரியாசிட்டி.
செல்ஃபி...
செவ்வாயில் குடியேறி ஓராண்டு காலம் நிறைவடைந்த சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வகையில், தனது ரோபோ கைகளை வெளியே நீட்டி தன்னைத் தானே செல்ஃபி எடுத்து அனுப்பியுள்ளது க்யூரியாசிட்டி.
நாசா மகிழ்ச்சி...
இந்த க்யூரியாசிட்டி விண்கலத்தை அனுப்பிய நோக்கம் வெற்றிகரமாக நிறைவேறி வருவதாக நாசா தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளது.