எனது பெற்றோரை மன்னித்து விடுங்கள் ராகுல்: நளினி-முருகன் மகள் அரித்ரா கோரிக்கை
லண்டன்: ‘எனது பெற்றோர்கள் மன்னிக்கப்பட போதுமான தகுதி கொண்டுள்ளனர். எனவே, அவர்களை மன்னித்து விடுங்கள்' என மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகனும், காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுலிடம் கோரிக்கை விடுத்துள்ளார் நளினி-முருகன் மகளான அரித்ரா ஸ்ரீஹரன்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளான முருகன் - நளினி தம்பதியினரின் ஒரே மகள் அரித்ரா ஸ்ரீஹரன். 22 வயதாகும் இவர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.
நேற்று முந்தினம் உச்சநீதிமன்றம் அளித்த தண்டனைக் குறைப்பு உத்தரவைத் தொடர்ந்து சிறையில் உள்ள ராஜீவ் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரை விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது.
மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினை தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், குற்ற விசாரணை முறை சட்டம் 432-ல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
தமிழக அரசின் இந்த உத்தரவால் தமிழ் ஆர்வலர்கள் மகிழ்ச்சியுடன் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் துணைத் தலைவரும், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகனுமான ராகுல் காந்தி, தமிழக அரசின் உத்தரவுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார். அதில், இந்தியாவின் பிரதமராக இருந்த ஒருவருக்கே நீதி கிடைக்கவில்லையென்றால், சாமானியருக்கு எப்படி நீதி கிடைக்கும்' என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், லண்டனில் உள்ள நளினி-முருகனின் தம்பதியின் மகளான அரித்ரா ஸ்ரீஹகரன் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனியார் செய்தி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
மன்னித்து விடுங்கள்....
ராகுல் காந்தியிடம் மிகவும் வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது பெற்றோர்கள் மன்னிக்கப்பட போதுமான தகுதி கொண்டுள்ளனர்.
நானும் பாதிக்கப் பட்டவள் தான்...
நீங்கள் விரும்பிய ஒருவரின் இழப்பு என்னால் புரிந்துக் கொள்ள முடியும். அத்தகைய தண்டனையால் நான் பாதிக்கப்பட்டேன்.
பெற்றோரைப் பிரிந்து வாடுகிறேன்....
நான் எனது பெற்றோர்களுடன் இருக்க விரும்புகிறேன். எனது பெற்றோர்கள் உயிருடன் உள்ளனர். இருந்தும் அவர்களுடன் நான் இருந்ததில்லை.
போதுமான தண்டனை....
அவர்கள் குற்றம் செய்து இருந்தாலும் அதற்கான தண்டனையை போதுமான அளவு அனுபவித்துவிட்டனர்.
முதல்வருக்கு நன்றி...
மேலும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு எனது நன்றிகள். அவர்தான் இதனை சாதித்துள்ளார். எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று என்னால் வெளிபடுத்த முடியவில்லை.
நிரபராதிகள்...
எனது பெற்றோர்கள் கண்டிப்பாக ஒரு வெளியே வருவார்கள் என்று எனக்கு தெரியும். அவர்கள் நிரபராதிகள்" என இவ்வாறு அரித்ரா கூறியுள்ளார்.