சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம்- பலியான தமிழ் பெண்ணின் பாஸ்போர்ட் எரிந்த நிலையில் கண்டெடுப்பு
கீவ்: கடந்த ஆண்டு ஜூலை மாதம் உக்ரைனில் பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்தவர்களில் மலேசியா வாழ் தமிழ் குடும்பமும் அடக்கம். அதில் அந்த பெண்ணின் பாஸ்போர்ட் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூர் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 உக்ரைனில் பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 298 பேர் உடல் சிதறி பலியாகினர்.
விமானம் உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவுப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பக் ஏவுகணையை அவர்களுக்கு அளித்ததே ரஷ்யா தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் விழுந்த இடம் ரஷ்ய ஆதரவுப்படையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் பயணிகளின் உடல் பாகங்கள் சிலவும், உடைமைகளும் அங்கேயே கிடக்கின்றன. அந்த பகுதியில் உக்ரைன் ராணுவத்திற்கும், ரஷ்ய ஆதரவுப்படைக்கும் இடையே கடும் மோதல் நடப்பதால் மீட்பு பணியை முழுதாக மேற்கொள்ள முடியவில்லை.
பாஸ்போர்ட்
விமானம் விழுந்த இடத்தில் பாதி எரிந்த நிலையில் பெண் ஒருவரின் பாஸ்போர்ட் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படத்தில் இருப்பவர் மேபல் அந்தோணிசாமி சூசை என்பது தெரிய வந்துள்ளது.
மேபல்
மலேசிய வாழ் தமிழரான மேபல் அந்தோணிசாமி சூசை அங்கு கல்லூரியில் பேராசிரியையாக இருந்தார். அவர் ஷெல் நிறுவனத்தின் ஐடி பிரிவில் பணியாற்றிய தனது கணவர் பால் ராஜசிங்கம் சிவஞானம்(52), மகன் மேத்யூ(9) ஆகியோருடன் நெதர்லாந்து சென்றுவிட்டு நாடு திரும்புகையில் விபத்தில் சிக்கி பலியானார்.
உடல்கள்
மேபல் மற்றும் பாலின் உடல்கள் முதலிலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. ஆனால் மேத்யூவின் உடல் அக்டோபர் மாதம் தான் அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து அந்த 3 பேரின் உடல்களும் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அடக்கம்
மேபல், பால் மற்றும் மேத்யூ ஆகியோரின் உடல்கள் மலேசியாவில் உறவினர்களால் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேபல் மேத்யூ, நாதன் என்ற இரட்டை குழந்தைகளை பெற்றவர். அதில் நாதன் சிறு குழந்தையாக இருக்கும்போதே இறந்துவிட்டார். நாதனை அடக்கம் செய்த இடத்திற்கு அருகிலேயே மேபல், பால் மற்றும் மேத்யூ ஆகியோரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.