இறந்து 77 ஆண்டுகளுக்குப் பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது ருமேனிய ராணியின் ‘இதயம்’
லண்டன்: ருமேனிய நாட்டு ராணி மேரியின் இதயம், அவர் இறந்து சுமார் 77 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து ராணி விக்டோரியாவின் மகன் இளவரசர் ஆல்பிரட். இவரது மகளான மேரி, ருமேனியா நாட்டின் மன்னர் முதலாம் பெர்டினான்டை மணந்து கொண்டு அந்த நாட்டின் ராணி ஆனார். கடந்த 1938ம் ஆண்டு மேரி காலமானார்.
அவரது உடல் ஆர்கஸ் ஆற்றங்கரையில் உள்ள கர்ட்டி டி ஆர்கஸ் நகரில் உள்ள மடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
கோவில் கட்ட வேண்டும்...
ஆனால், இறப்பதற்கு முன்னர் தனது இதயத்தை தனக்குப் பிடித்தமான கோடைகால இல்லம் அமைந்துள்ள கருங்கடல் நகரமான பால்சிக்கில் சிறிய ஆலயம் கட்டி அடக்கம் செய்ய வேண்டும் என்பது மேரியின் கடைசி ஆசை.
தற்காலிக இடமாற்றம்...
அதன்படியே அவரது இதயமும் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆனால், கடந்த 1940ம் ஆண்டு அந்தப் பகுதி பல்கேரியாவுக்கு திருப்பித்தரப்பட்டது. இதனால் ராணியின் இதயத்தை அங்கிருந்து கார்பாத்தியன் மலைப்பகுதியில் உள்ள பிரான் கேசில் என்ற கோட்டைக்கு தற்காலிகமாக எடுத்துச் சென்றனர்.
தேசிய வரலாற்று அருங்காட்சியகம்...
கம்யூனிஸ்டு காலத்தில், இந்த பிரான் கேசில் கோட்டை அழிக்கப்பட்டது. இதனால் ராணியின் இதயம், தேசிய வரலாற்று அருங்காட்சியகத்துக்கு இடம் பெயர்ந்தது. கடந்த 1971ம் ஆண்டு முதல் ராணி மேரியின் இதயம் தேசிய வரலாற்று அருங்காட்சியத்திலேயே வைத்துப் பாதுகாக்கப்பட்டு வந்தது.
நல்லடக்கம்...
இந்நிலையில், அரண்மனையுடன் தொடர்புடைய இடத்துக்கு ராணியின் இதயத்தை இடம் மாற்ற வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, ராணி மேரி மறைந்து சுமார் 77 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது இதயம் சிறிய வெள்ளி பெட்டியில் வைத்து, கார்பாத்தியன் மலைப்பகுதியில் அமைந்துள்ள பெலிசார் கேசில் நேற்று முன்தினம் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ராணி மேரியின் வம்சத்தினரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.