நேபாளத்தில் கொட்டி தீர்க்கும் அதீத மழை.. பெருவெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 65 பேர் பலி
Recommended Video
காத்மாண்டு: நேபாளத்தில் கொட்டி தீர்த்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் மாயமானதாக கூறப்படும் 30 பேரை தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பருவமழை தொடங்கியது. ஆனால் சராசரியாக மழை பெய்யாமல் குறைந்த நாட்களில் மிக அதிக அளவு மழைகொட்டி வருகிறது. இதனால் அந்நாட்டில் தாழ்வான பகுதிகளில் கடும் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை முதல் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலுள்ள இமயமலை பகுதியின் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக நேபாள நாட்டின் கிழக்குப் பகுதியிலும், அதன் தெற்கு சமவெளிகளிலும் கடுமையான மழை பெய்து வருகிறது.
பலத்த மழை காரணமாக நேபாளத்தின் தாழ்வான பகுதிகளை பெரு வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. மின்சாரம் விநியோகமும் தடை செய்யப்பட்டுள்ளது. பல முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டு மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கிழக்கு நேபாளத்தில் பாயும் கோசி நதியில், அபாய அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
2 மாதங்களில் பெய்ய வேண்டிய மழையானது தற்போது ஒரு வாரத்திற்கும் மேலாக அங்கு கொட்டி தீர்க்கிறது. மேலும் இந்த அதீத மழை மேலும் சில நாட்கள் தொடர வாய்ப்பு இருப்பதால் மக்கள் இன்னும் கவனமுடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இமாச்சலில் தாபா இடிந்து விபத்து.. 7 பேர் பலி, இடிபாடுகளுக்குள் சிக்கியோரை மீட்கும் பணி தீவிரம்
இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களை காவல்துறையினர் மற்றும் மீட்புப்படையினர் வெள்ளம் பாதித்த இடங்களுக்கு சென்று மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களில் இருந்து இதுவரை 1,146 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் நேபாள அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.