சீனாவில் சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்க்கும் கனமழை.. பெருவெள்ளத்தில் சிக்கி 61 பேர் பலி
குவாங்டாங்: சீனாவில் கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக செஜ்ஜியாங், ஃப்யூஜியாங் உள்ளிட்ட ஏராளமான மாகாணங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதுவரை வெள்ளத்தில் சிக்கி, 61 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் 30-க்கும் மேற்பட்டோரை காணவில்லை எனவும், 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து நிர்கதியாக தவித்து நிற்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் கடந்த ஒரு வார காலமாக, சூறைக்காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால்
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
உங்களை நினைக்காமல் ஒரு நாளும் கடப்பதில்லை.. மிஸ் யூ அப்பா.. தந்தையர் தினத்தில் ஸ்டாலின் உருக்கம்
ஏராளமான விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. திரும்பும் திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. சுமார் 7 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஃப்யூஜியாங் மாகாணத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. குவாங்டங் மாகாணத்தில், வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் சிக்கி தவித்த ஆயிரக்கணக்கானாரை மீட்டுள்ள மீட்பு குழுவினர் அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.
இதனிடையே சீனாவின் அவசரநிலை மேலாண்மை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், கனமழை வெள்ளத்தில் சுமார் 9,300 வீடுகள் இடிந்து விழுந்துவிட்டதாக கூறியுள்ளது. மேலும், 3.71 மில்லியன் ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் சிக்கி முற்றிலும் சேதமடைந்துள்ளன.
தற்போதைய நிலவரப்படி கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள நேரடி பொருளாதார இழப்புகள், 13.35 பில்லியன் யுவான் என மதிப்பிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
சீனாவில் வழக்கமாக கோடை காலத்தின் போது வடக்கு மாகாணங்கள் வறட்சியாலும் மற்றும் தெற்கு மாகாணங்கள் வெள்ளத்தாலும் பாதிக்கப்படுகின்றன. தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் வெள்ளம் கரைபுரண்டோடும் சூழலில், நடப்பாண்டு வடக்கு மாகாணங்கள் குறைந்த அளவிலான மழையையே பெற வாய்ப்பு உள்ளது.
இதனால் சீனாவின் வடக்கு மாகாணங்கள் கூடிய விரைவில் பெரும் வறட்சியை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.