தென்மேற்கு பகுதியில் கொட்டித் தீர்க்கும் கனமழை... அல்லாடும் சீன மக்கள்
பெய்ஜிங்: சீனாவின் தென்மேற்கு பகுதியில், இடைவிடாது பெய்து வரும் கனமழையால், முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
தென்மேற்கு சீனாவின் சோங்கிங் (Chongqing) பகுதியில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள செங்டூ- சோங்கிங் எக்ஸ்பிரஸ்வே உள்ளிட்ட முக்கிய சாலைகள் மற்றும் தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
சாலைகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் பணியில் துப்புரவு பணியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சாலைகளில் வாகனங்கள் நீண்ட வரிசைக்கட்டி நிற்கின்றன. இந்நிலையில் சோங்கிங் நகராட்சியில் உள்ள ஆற்றின் குறுக்கே மிக உயரமாக கட்டப்பட்டிருந்த மேம்பாலத்தில் நீர் தேங்கியது.
வாகன போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால், சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்பில் சிறு சிறு துளைகளிட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதே போல், சீனாவின் வடமேற்கு பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருவதால், ஷான்ஸி மாகாணத்தில் ஆறுகளில் அபாயக்கட்டத்தை கடந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அங்குள்ள சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.