நேபாளத்தில் கொட்டும் கனமழை- யாத்திரை சென்ற 1300 பக்தர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிப்பு!
நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் யாத்திரை சென்ற 1300 பக்தர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
காத்மாண்டூ: நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் யாத்திரை சென்ற 1300 பக்தர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு இந்தியா முழுவதிலும் இருந்து 1300 பக்தர்கள் சென்றிருந்தனர். இந்நிலையில் நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழையும் கடுமையான பனிப்பொழிவும் நிலவி வருகிறது.
பலத்த மழை காரணமாக நேபாளத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
யாத்திரை சென்ற பக்தர்களில் 300 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களில் 19 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சிக்கியிருப்பவர்களில் தமிழக முன்னாள் எம்எல்ஏ காயத்ரி தேவியும் ஒருவர் ஆவார்.
நேபாளம் - சீனா எல்லையில் உள்ள ஹில்சா என்ற இடத்தில் பக்தர்கள் தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் தங்களை மீட்குமாறு பக்தர்கள் தங்களின் உறவினர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.