ஆத்தாடி என்ன குளிரு.. சூடா டீயை தூக்கி எறிஞ்சா.. பொடிப் பொடியா சிதறுது.. சில்லிடும் சிகாகோ!
சிகாகோ: ஆமா, இங்க இருந்த சிகாகோவை எங்க காணோம் என்று வடிவேலு கேட்பது போல கேட்கத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு ஊரே அடையாளம் தெரியாமல் அண்டார்டிகா போல மாறி பனிப் பிரதேசமாக காட்சி தருகிறது.
அண்டார்டிகாவை விட குளிராக இந்த வாரம் முழுவதும் சிகாகோ இருக்கும் என்று தட்பவெப்ப நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதற்கு காரணம் போலார் வேர்டெக்ஸ். இதன் காரணமாக சிகாகோ நகரின் முக்கிய விமான நிலையமான ஓ ஹேர் ஏர்போர்ட்டில் கிட்டத்தட்ட 670 விமானங்களின் போக்குவரத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
1985 ஆம் ஆண்டு ஜனவரி 20 ம் தேதி பதிவான -27 டிகிரி செல்சியஸ் என்பதே இதுவரை சிகாகோ நகரில் பதிவானதில் குறைந்த வெப்ப நிலையாகும். இப்போது கிட்டத்தட்ட 34 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு மாற்றி எழுதப்படுகிறது. ஜனவரி 29,2019 இன்று -29 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளது. இதன் காரணமாகவே சிகாகோ அண்டார்டிக்காவாக மாறி உள்ளது.
கடுமையான காற்று குளிர் காரணமாக பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகம் சென்று வேலை பார்க்கும் மக்கள் கூட அலுவலகம் செல்லாமல் வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
வீடுகள் இல்லாத மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவி செய்து வருகிறார்கள். குளிரை சமாளிக்க அவர்களுக்கு ஹீட்டர் வசதி உள்ள பேருந்துகள் மற்றும் நூலகங்கள், காவல் நிலையம், கோவில்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
சிகாகோ நகரில் பிரபலமான லேக் மிச்சிகன் நதி மேல் நீர் அப்படியே பனிக்கட்டியாகி பனி துண்டுகளாகி மிதந்து கொண்டிருக்கிறது. இப்படியாக சிகாகோ நகரம் இந்த பனியில் எப்படி உறைந்து கிடக்கிறது என்று மேலும் பார்த்து தெரிந்து கொள்ள இந்த விடீயோவைப் பாருங்க.
- Inkpena சஹாயா, சிகாகோ