வரலாற்றை மாற்றிய “பியர்ல் ஹார்பர்” கடற்பகுதியில் நொறுங்கி விழுந்த ஹெலிகாப்டர்
ஹவாய்: பசிபிக் கடலில் அமெரிக்காவுக்கு சொந்தமான ஹவாய் தீவருகே அமைந்துள்ள பியர்ல் துறைமுகத்தில் சுற்றுலா ஹெலிகாப்டர் ஒன்று கடலில் விழுந்து நொறுங்கியது.
இதனை ஷாவ்ன் வின்ரிச் என்கின்ற சுற்றுலாப் பயணி வீடியோவாக பதிவு செய்துள்ளார். கடற்கரையில் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்த அவர் ஹெலிகாப்டர் ஒன்று தங்களை நெருங்கி வருவதைக் கண்டுள்ளார்.
"நான் அவர்கள் ஏதோ ஒரு சாகசத்திற்காக வருவதாக நினைத்து அதனை பதிவு செய்தேன். ஆனால், அந்த ஹெலிகாப்டர் திடீரென்று தண்ணீரில் விழுந்து நொறுங்கியது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
காப்பாற்றும் முயற்சி:
உடனடியாக அவரும், மற்ற சுற்றுலாப் பயணிகளும் ஹெலிகாப்டரில் பயணித்தவர்களை காப்பாற்ற குதித்துள்ளனர். அந்த ஹெலிகாப்டரில் பைலட் உட்பட 6 பேர் பயணம் செய்துள்ளனர். அதில் 5 பேர் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள்.
பெல் 206 ரகத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர் ஜெனிசிஸ் நிறுவனம் மூலமாக சுற்றுலாவிற்காக அனுப்பப்பட்டதாகும். பயணித்தவர்களில் ஒருவரான 16 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் பைலட் மற்றும் மற்றொருவரின் நிலை குறித்த தகவல்கள் தெரியவில்லை. இந்த வருடத்தில் ஓகுவில் நடைபெற்ற இரண்டாவது ஹெலிகாப்டர் விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.
பியர்ல் துறைமுகத்தின் பின் ஒரு பெரிய உலக வரலாறே ஒளிந்து கொண்டிருக்கின்றது. இரண்டாம் உலகப் போரில் பெரும் பங்கு பெற்றது பியர்ல் ஹார்பர். இதன் மீது ஜப்பான் நடத்திய விமானத் தாக்குதல் 1941ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி. அன்றுதான் உலகப் போரில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டு வரலாறே மாறியது. ஜப்பான் தாக்குதலில் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 8 அமெரிக்கப் போர்க்கப்பல்களும், 200 விமானங்களும் அழிந்தன. 3,000 அமெரிக்க வீரர்களும் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து அமெரிக்கா 2ம் உலகப் போரில் குதித்தது. ஜப்பான் மீதும், ஜெர்மனி மீதும் போர்ப் பிரகடனம் செய்தார் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட். இதன் மூலம் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய 4 வல்லரசு நாடுகளும் ஒரே அணியில் நின்று ஜெர்மனி மீதும், ஜப்பான் மீதும் தாக்குதல் நடத்தின. ஜப்பான் மீது அணுகுண்டும் வீசப்பட்டது நினைவுகூறத்தக்கது.