(மெல்ல) சுத்துதே பூமி... நாளை 1 வினாடி அதிகமாக இருக்கும் - நாசா தகவல்!
நியூயார்க்: ஜூன் 30ம் தேதியான நாளை பூமி தனது வழக்கமான சுழற்சி வேகத்தை இழப்பதால் 1 வினாடி அதிகமாக இருக்கும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரியனை மையமாகக் கொண்டு பூமி உட்பட சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்கள் இயங்கி வருகின்றன. பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு, சூரியனை ஒரு தடவை முழுமையாக சுற்றி முடிப்பதை ஓராண்டு என்கிறோம்.
பூமி தன்னைத் தானே ஒருமுறை சுற்றிக் கொள்வது ஒரு நாள் எனக் கொள்ளப் படுகிறது. வழக்கமாக ஒரு நாளைக்கு 24 மணி நேரம் ஆகும். இந்த 24 மணி நேரத்தில் பகல் 12 மணி நேரமாகவும், இரவு 12 மணி நேரமாகவும் உள்ளது.
24 மணி நேரம்...
அதேபோல், 24 மணி நேரமானது நிமிடம், வினாடி என்று பிரிக்கப்பட்டுள்ளது. 60 வினாடி நேரத்தை ஒரு நிமிஷம் என்றும், 60 நிமிடங்கள் என்பதை ஒரு மணி நேரமாகவும் கணித்துள்ளனர்.
டைனோசர்கள் காலத்தில்...
டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் நாளொன்றிற்கு 23 மணி நேரமாக இருந்ததாகவும், கடந்த சில நூற்றாண்டுகளில் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக பூமி சுற்றும் வேகம் குறைந்து நேரம் அதிகரித்து தற்போது நாளொன்றிற்கு 24 மணி நேரமாகி விட்டதாக கூறப்படுகிறது.
பூமி சுழற்சி வேகம் குறையும்...
தற்போது பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக் கொள்வதற்கு 86 ஆயிரத்து 400 வினாடிகளை எடுத்துக் கொள்கிறது. இந்நிலையில், நாளை பூமியின் இந்த வேகம் இன்னும் குறைய இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
புவீஈர்ப்பு விசை அதிகரிபு...
பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள அலைகளால் புவிஈர்ப்பு விசை அதிகரித்துள்ளதாகவும், அதனால் பூமி சுற்றும் வேகம் குறைய உள்ளதாகவும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
கூடுதலாக ஒரு விநாடி...
இந்த காரணங்களால் நாளை கால அளவு 1 வினாடி அதிகமாக இருக்கும். பொதுவாக ஒரு நாள் முடியும் போது, சர்வதேச ஒருங்கிணைப்பு திட்ட நேரம் (யு.டி.சி) 23:59:59: என்று காட்டும். அடுத்த வினாடி அது 00:00:00 என மறுநாள் கால நேர கணக்கைத் தொடங்கி விடும்.
சர்வதேச விஞ்ஞானிகள்...
ஆனால் நாளைய தினம் அப்படி இருக்காது. நாளை 24 மணி நேரம் முடிந்ததும் 23:59:59 என்பதற்கு பதில் 23:59:60 என்று மாறிவிடும். இதன் மூலம் நாளை 1 வினாடி அதிகரித்து விடும். இந்த 1 வினாடி நேரத்தை குறைத்து சரி செய்யப்போவதாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு அறிவித்துள்ளது.
மாற்றம்...
இதேபோல், பூமியின் சுழற்சி வேகம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதை நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். எதிர்காலத்தில் இதனால் பூமியின் சுற்றுப்பாதையில் மாற்றம் ஏற்படலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
அடுத்த 100 கோடி ஆண்டுகளில்...
பூமி சுழற்சி வேகம் குறைவதால், அடுத்த 100 கோடி ஆண்டுகளில் பூமியில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும், அது நமது கற்பனைக்கும் எட்டாததாக இருக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.