சத்துணவு முட்டையில் மட்டுமல்ல, கிரிக்கெட் முட்டையிலும் இந்தியா 'உலக சாதனை'!
லண்டன்: ஒரே இன்னங்சில் அதிகம் டக்-அவுட்டான அதாவது ஆறு பேட்ஸ்மேன்கள் முட்டை போட்ட உலக சா(சோ)தனையை இந்தியா சமன் செய்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டர், ஒல்டு டிராஃபோர்ட் மைதானத்தில் நேற்று தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் ஆறு பேட்ஸ்மேன்கள் டக்-அவுட் ஆனார்கள். இது ஒரு மோசமான சாதனை என்று கிரிக்கெட் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
அப்படியே பேட்டிங் பண்ணிட்டாலும்...
டாசில் வெற்றி பெற்ற இந்தியா, அடித்து சாதித்துவிடுவதை போல முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான அந்த ஆடுகளத்தில், அடுத்தடுத்து இந்திய வீரர்கள் பெவிலியன் நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
சுருண்டது
இதன்விளைவாக 46.4 ஓவர்களில் இந்திய அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களில் சுருண்டது.
பழி வாங்கிய ஸ்டூவர்ட் பிராட்
டி20 கிரிக்கெட் போட்டியொன்றில் யுவராஜ் சிங்கிடம் ஒரே ஓவரில் ஆறு சிக்சர்கள் பறிகொடுத்த இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் நேற்று அதற்கு பழிவாங்கிவிட்டார். 13.4 ஓவர்கள் மட்டுமே வீசிய அவர் 25 ரன்களை விட்டுக்கொடுத்து இந்தியாவின் 6 பேட்ஸ்மேன்களை அவுட் செய்தார்.
முட்டை சிங்கங்கள்
இந்திய தரப்பில் முரளி விஜய், விராட் கோஹ்லி, புஜாரா, ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், பங்கஜ் சிங் ஆகிய ஆறு பேர் ரன் ஏதும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி ஏமாற்றினர்.
பாகிஸ்தானுமா... அப்போ சந்தோஷம்
இதற்கு முன்பு பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகள் 6 பேர் டக்-அவுட்டான மோசமான சாதனையை படைத்துள்ளன. கிரிக்கெட்டின் பரம எதிரி பாகிஸ்தானும் இப்படி அவுட் ஆகியுள்ளதை நினைத்து மகிழ்ச்சியடைய வேண்டியதுதான். எதிரிக்கு ஒரு கண்ணாவது போயுள்ளதே என்று.
ஆஹா.. என்ன ஒரு முன்னேற்றம்
இந்தியா இதற்கு முன்பு ஒரே இன்னிங்சில் 5 பேரை டக்-அவுட்டுக்கு பறிகொடுத்ததுதான் மோசமான சாதனையாக இருந்தது. இப்போது உலக டக்-அவுட் சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது (நல்ல முன்னேற்றம்தான் போங்கோ..)
விழுந்துட்டோம்.. ஆனா மண் ஓட்டலை
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல, ஆறு பேர் டக்-அவுட் ஆனாலும், நாம கொஞ்சம் தேவலையாம். எப்படி தெரியுமோ... ஏற்கனவே ஆறுபேரை டக்குக்கு பறிகொடுத்த அணிகள் அந்த இன்னிங்சுகளில் எடுத்த ரன்னைவிட நாம் அதிகமாம். அதாவது 152 ரன்கள். டோணியும், அவரது சிஷ்யபுள்ளை, அஸ்வினும் போராடிதான் இந்த ரன்னை எடுக்க வைத்தனர்.