அதிகரித்த அபின், ஹெராயின் கலந்த மருந்துகள் - அமெரிக்காவில் ஒரே ஆண்டில் 47,000 பேர் பலி
நியூயார்க்: அமெரிக்காவில் அளவுக்கு அதிகமாக போதைப் பொருட்கள் கலந்த மருந்துகளை எடுத்துக் கொண்டதால் கிட்டத்தட்ட 47,000 அமெரிக்கர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டில் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தரும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
கடுமையான வலியை மரத்துப்போக வைக்கவும், மன உளைச்சலுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படும் அபின் சார்ந்த மருந்துகள் மற்றும் ஹெராயின் பயன்பாடு அமெரிக்காவில் அதிகரித்துள்ளது.
இதனால் கடந்த 2014 ஆம் ஆண்டில் மட்டும் 47,055 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட 6.5 சதவீதம் அதிகம் என தெரியவந்துள்ளது.
அதிகரித்த போதைப் பழக்கம்:
அமெரிக்காவின் வடக்கு விர்ஜினியா, நியூ மெக்சிகோ, நியூ ஹாம்ப்ஷைய்ர், கென்ட்டுக்கி மற்றும் ஓஹியோ மாநிலங்களில் இத்தகைய இறப்புகள் அதிகம் பதிவாகியுள்ளது என அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.
அபின் கலந்த மருந்துகளே காரணம்:
கடந்த 2000 ஆம் ஆண்டிலிருந்து ஓவர்டோஸ் இறப்புகள் 137 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் அபின் கலந்த மருந்துகளை அதிகமாக பயன்படுத்தி இறந்தவர்கள் எண்ணிக்கை 200 சதவீதமாகியுள்ளது.
கொத்துக் கொத்தாய் சாவு:
கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் கிட்டதட்ட 5 லட்சம் பேர் இதைப்போல் இறந்துள்ளனர். அதிகமாக ஹெராயின் பயன்படுத்தி இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
ஓவர்டோஸ் இறப்புகள்:
உள்நாட்டு கள்ளச்சந்தையில் குறைந்த விலையில் அதிகவீரியம் மிக்க ஹெராயின், அபின் சார்ந்த மருந்துகள் தாராளமாக நடமாடுவதால்தான் இதைப்போன்ற ஓவர்டோஸ் இறப்புகள் அதிகரித்து வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத்துறை நேற்று வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.