தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட முதியவர் உயிரிழப்பு... ஃபைசர் தடுப்பு மருந்து காரணமா?
ஜெனிவா: கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட 91 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகெங்கும் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனாவும் பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது.
இந்த உருமாறிய கொரோனா வைரஸ் மற்ற வகைகளைவிட 70% வேகமாகப் பரவும் என்பதால் தடுப்பு மருந்து விநியோகத்தை விரைவுபடுத்துவதே கொரோனா பரவலைத் தடுக்க ஒரே வழி என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உருமாறிய கொரோனா வைரசால் அச்சப்பட வேண்டாம்... ஆனால் கவனமா இருக்கணும்... எய்ம்ஸ் இயக்குனர் ஆறுதல்!
தடுப்பு மருந்துகள்
அமெரிக்காவின் ஃபைசர், மாடர்னா மற்றும் பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆகியவை தங்கள் தடுப்பு மருந்தின் சோதனைகளை நிறைவு செய்துள்ளன. அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளும் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டிற்கு அனுமதியளித்துள்ளன.
தடுப்பு மருந்து வழங்கும் பணி
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளிலும் தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தில் கடந்த வாரம் தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டன. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி முதலில் வயதானவர்களுக்கும், அதிக ஆபத்துள்ளவர்களுக்கும் தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
முதியவர் பலி
அதன்படி கடந்த வாரம் சுவிட்சர்லாந்து நாட்டில் 91 வயது முதியவர் ஒருவருக்கு ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்து அளிக்கப்பட்டது. தடுப்பு மருந்தின் முதல் டோஸை எடுத்துக்கொண்ட ஒரே வாரத்தில் அந்த முதியவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரணம் என்ன
இந்த உயிரிழப்பு குறித்து சுவிட்சர்லாந்து சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் தடுப்பு மருந்திற்கும் அவரது உயிரிழப்பிற்கும் தொடர்பில்லை என்று தெரிவித்துள்ள சுகாதாரத் துறையினர், அந்த முதியவருக்கு ஏற்கனவே பல நோய்கள் இருந்ததாகவும், அதில் எதாவது ஒரு நோயின் தீவிரதன்மை அதிகரித்ததால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
ஃபைசர் விளக்கம்
உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், தடுப்பு மருந்திற்குத் தொடர்பில்லாத இதுபோன்ற உயிரிழப்புகள் துரதிர்ஷ்டவசமானது என்றும் முதியவர்களுக்கும் அதிக ஆபத்து இருக்கும் நபர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதாலேயே இவ்வாறு உயிரிழப்புகள் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளது. உலகெங்கும் இதுவரை பல லட்சம் பேருக்கு ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.