தேர்தலில் நான் தோற்றதற்கு ரஷ்ய அதிபர் புடின்தான் காரணம்!- ஹிலரி க்ளிண்டன் விளாசல்!
நியூயார்க்(யு.எஸ்): அதிபர் தேர்தலில் தோற்றதற்கு ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினும், அமெரிக்கப் புலனாய்வுத் துறை இயக்குநர் ஜேம்ஸ் கோமியும் தான் காரணம் என்று ஹிலரி க்ளிண்டன் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிபர் தேர்தலுக்காக நிதி வழங்கிய நன்கொடையாளர்களுக்கு நன்றி சொல்வதற்காக ப்ளாசா ஹோட்டலில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அங்கு கலந்து கொண்ட நன்கொடையாளர்களிடம் தேர்தலில் தோற்றதற்கு ரஷ்ய அதிபர் புடினும், புலனாய்வுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் கோமியுமே காரணம் என்று ஹிலரி கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "தனி சர்வர் உபயோகித்த விவகாரத்தில், தேர்தலுக்கு முந்தய வாரம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பி கோமி, தேர்தலை திசை திருப்பினார்.
ரஷ்ய அதிபர் புடின், அமெரிக்க அதிபர் தேர்தலில் நேரடியாக தலையிட்டு ஹேக் செய்யப்பட்ட தகவல்களை எப்படி உபயோகிப்பது என்று கட்டளைகள் வழங்கினார்.
ரஷ்யாவில் புடினின் சகாக்கள் அவரிடம் கோபம் கொண்டதற்கு என்னை குற்றம் சாட்டினார். அப்போது சொன்னதைப் போல் இப்போது பழிவாங்கி விட்டார்.
என்னை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே மறைமுக சதித்திட்டம் தீட்டி ஹேக்கர்கள் மூலம் ஜனநாயகக் கட்சியினரின் சர்வர்கள், இமெயில்கள் ஹேக் செய்யப்பட்டன.
திருடப்பட்ட தகவல்களை எப்படி திரித்து மக்களிடம் கொண்டு செல்வது என்பதை புடின் தனது நேரடி கண்காணிப்பில் செயல்படுத்தியுள்ளார்.
புடின் என் மீது பழிவாங்கியது ஒரு புறம் இருந்தாலும், அமெரிக்க ஜனநாயகத்தையும் கேலிக்குரியதாக்கியுள்ளார்.
2011 ரஷ்ய தேர்தலின் போது , ஜனநாயகக் கொள்கைகளுக்கு துணையாக அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளராக, புடினை எதிர்த்து நின்றதை பெருமையாகக் கருதுகிறேன்.
எனது ஆதரவாளர்களாகிய நீங்களும் ஜனநாயகத்திற்கு துணையாக இருக்க வேண்டும். தோல்வியைக் கண்டு மனம் வருந்தவேண்டாம்," என்றார்.
ட்ரம்ப் ட்வீட் ட்விஸ்ட்
ஹிலரியின் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
இப்போது குற்றம் சாட்டுபவர்கள் ஹிலரி தோற்பதற்கு முன்னால் என்ன செய்து கொண்டிருந்தார்கள். வெள்ளை மாளிகை உறங்கிக் கொண்டிருந்ததா? அப்போதே நடவடிக்கை எடுத்திருக்கலாமே என்று கருத்து தெரிவித்துள்ளார்.
தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதன் மூலம் ரஷ்ய அதிபரின் , ரகசிய திட்டங்களை ஒப்புக்கொள்வது போலிருக்கிறது ட்ரம்பின் ட்வீட்.
அதிபர் ஒபாமாவும் ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார். புலானாய்வுத் துறையின் மூலம் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. செனட் அவையில் இரு கட்சியினரும் கூட்டாக இது குறித்து விரிவான விசாரணை நடத்தவேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளனர்.
ஒருவேளை ரஷ்யாவின் சர்வர், ஹேக்கர் தாக்குதல்கள் புலனாய்வுத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு விட்டால் தேர்தல் முடிவு என்னவாகும்? ட்ரம்ப் அதிபராக தொடர முடியுமா? அல்லது தேர்தல் முறைகேடு காரணத்திற்காக பதவி விலகுவாரா? பாராளுமன்றம் அவரை பதவி நீக்கம் செய்யுமா? இது போன்ற நிலைகளில் அமெரிக்க சட்டங்கள் என்ன சொல்கின்றன? போன்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
- இர தினகர்