ஹிலாரி, கிளிண்டனின் மனைவியே இல்லை... பயங்கரமாக ஏமாற்றுகிறார்கள்: பரபரப்பைக் கிளப்பும் எழுத்தாளர்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன், அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியே இல்லை என பரபரப்பு கிளப்பியுள்ளார் அமெரிக்க எழுத்தாளர் ரொனால்ட் கெஸ்லர்.
அடுத்தாண்டு நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் ஜனநாயகக் கட்சி சார்பில் களமிறங்குகிறார்.
பில் கிளிண்டன், 1993 முதல் 2001 வரை அமெரிக்க அதிபராகப் பதவி வகித்தார். அவரது மனைவி ஹிலாரி, 2009-2013 கால கட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
பிரச்சார வேலைகளில் பிசி...
அமைச்சர் பதவியிலிருந்து ஹிலாரி விலகிய பின்னர், பெருநிறுவனங்கள் ஏற்பாடு செய்த சிறப்புக் கூட்டங்களில் கலந்து கொண்டு தலைமைப் பண்பு, அரசியல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாற்றி வருகிறார். அதிபர் தேர்தல் பிரச்சார வேலைகளிலும் அவர் பரபரப்பாக இயங்கி வருகிறார்.
அடுத்து பெண் அதிபர் தான்...
அமெரிக்காவின் அடுத்த அதிபராக பெண் ஒருவர் வருவதையே விரும்புவதாக அந்நாட்டு மக்கள் 92 சதவீதம் பேர் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். இது ஹிலாரியின் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது.
போலி திருமணம்...
இந்நிலையில், ஹிலாரி, கிளிண்டனின் மனைவியே இல்லை என புதிய பரபரப்பை கொளுத்திப் போட்டுள்ளார் ரொனால்ட் கெஸ்லர். இவர் ஒரு எழுத்தாளர். அமெரிக்க ரகசிய உளவு அமைப்பினருடன் நல்ல தொடர்பு வைத்திருப்பவர். அவர்கள் குறித்து பல நூல்களையும் எழுதியுள்ளார்.
தொழில்முறை பார்ட்னர்கள்...
அவர் எழுதியுள்ள ஒரு நூலில் இதுகுறித்து குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தேர்தல் ஆதாயத்திற்காகவே ஹிலாரி தன்னை கிளிண்டனின் மனைவி எனக் கூறிக் கொள்வதாக கூறுகிறார். மேலும், கிளிண்டனும், ஹிலாரியும் தொழில்முறை பார்ட்னர்களாகவே அவர்களது வாழ்க்கையைத் தொடங்கியதாகவும்' அவர் தெரிவித்துள்ளார்.
மிகப் பெரிய மோசடி...
தொழில்முறை பார்ட்னர்களாக இருந்த ஹிலாரியும், கிளிண்டனும் சமுதாயத்தில் தங்களை கணவன், மனைவி எனக் கூறிக் கொள்வது மிகப் பெரிய மோசடி என்கிறார் கெஸ்லர்.
ரகசிய ஏஜெண்டுகள்...
கெஸ்லர் இதுவரை 20 புத்தகங்கள் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. எல்லாமே ரகசிய ஏஜெண்டுகள் குறித்த நூல்கள்தான். சமீபத்தில் அவர் அளித்த இன்னொரு பேட்டியில் எனர்ஜைசர் என்ற செல்லப் பெயர் கொண்ட ஒரு கட்டழகியுடன் கிளிண்டனுக்கு தொடர்பு இருப்பதாகவும், ஹிலாரி இல்லாத நேரத்தில் இருவரும் கொட்டமடிப்பதாகவும் கெஸ்லர் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
தேர்தல் ஆதாயம்...
ஹிலாரிக்கும் இது தெரியும் என்றாலும் கூட தேர்தல் சமயத்தில் தனக்கு ஆதாயம்தான் முக்கியம் என்பதால் இதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் கெஸ்லர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.