கவுதமலா நாட்டில் பயங்கர நிலச்சரிவு: 25 பேர் பலி- 600 பேர் கதி என்ன?
கவுதே: மத்திய அமெரிக்க நாடான கவுதமலாவில் நேற்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டு 25 பேர் பலியாகி உள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கவுதமலாவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதில் எல் கம்பிரே டூஸ் என்ற மலையடிவார கிராமத்தில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் அந்த கிராமமே மண்ணுக்குள் புதைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்ட சமயத்தில் அனைவரும் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்ததால் அவர்களால் தப்பிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.
நிலச்சரிவில் தப்பியோர் நிவாரண முகாம்களில் தாங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 600-க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.