மாட்டுக் கறி சாப்பிடாதே.. கொந்தளித்த வட இந்தியர்கள்.. போராட்டத்தில் குதித்த மலையாளிகள்
மாட்டுக்கறிக்கு எதிராக ஜெர்மனியில் வட இந்தியர் போராட்டம் நடத்தினர்
பிராங்பர்ட்: ஜெர்மனியில் நடந்த உணவுத் திருவிழாவின்போது மாட்டுக் கறி விநியோகிக்கக் கூடாது என்று கூறி வட இந்தியர்கள் சிலர் பிரச்சினையைக் கிளப்பினர். அவர்களின் நெருக்கடி காரணமாக மாட்டுக்கறி உணவு அப்புறப்படுத்தப்பட்டது. இதையடுத்து மலையாளிகள் போராட்டத்தில் குதித்தனர்.
பிராங்க்பர்ட் நகரில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் சார்பில் ஆகஸ்ட் 31ம் தேதி ஒரு உணவுத் திருவிழா நடைபெற்றது. அதில் பல்வேறு மாநிலங்கள் சார்பில் அவரவர் மாநில உணவு வகைகள் பரிமாறப்பட்டன. கேரள சமாஜம் சார்பில் கேரள உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தன. அதில் கேரள மக்கள் அதிகம் சாப்பிடும் மாட்டுக்கறி உணவுகளும் வைக்கப்பட்டிருந்தன.
விருந்துக்கு வந்திருந்த வட இந்தியர்கள் சிலர் மாட்டுக்கறி பரிமாறப்படுவதை அறிந்து போராட்டத்தில் குதித்தனர். மாட்டுக் கறி உணவு வைக்கப்பட்டிருந்த இடத்திற்குப் போய் தகராறில் ஈடுபட்டனர். உடனே இதை நிறுத்துங்கள் என்று ஆவேசமாக கூச்சலிட்டனர். இதையடுத்து துணைத் தூதரக அதிகாரிகளும் மாட்டுக்கறி ஸ்டாலை மூடுமாறு கேட்டுக் கொண்டனர்.
ஆஹா இம்ரான்கானா இது.. காஷ்மீர் விவகாரத்தில் போர்.. பல்டி அடித்த பாகிஸ்தான்
இதுதொடர்பாக தூதரக அதிகாரிகளுடனும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடனும் கேரள சமாஜம் நிர்வாகிகள் பேசிப் பார்த்தனர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இதையடுத்து மாட்டுக்கறி உணவுகளை சமாஜம் அப்புறப்படுத்தியது. ஆனால் இதனால் நிகழ்ச்சிக்கு வந்திருந்த மலையாளிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு வெளியே அமைதிப் போராட்டத்தில் குதித்தனர். இதுகுறித்து டோனி ஜார்ஜ் என்பவர் கூறுகையில் "இந்தியா பல்வேறு கலாச்சாரத்தை உள்ளடக்கிய நாடு. வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இந்தியாவின் அடிப்படையே. ஆனால் அதை தகர்க்கும் வகையில் சிலர் செயல்டுவது வேதனையாக உள்ளது. இது உண்மையான இந்தியாவே அல்ல. இந்தியாவை சர்வதேச அரங்கில் இவர்கள் அவமானப்படுத்தி விட்டனர்" என்று குமுறினார்.
தற்போது சமூக வலைதளங்களில் போராட்டம் நடத்திய வட இந்தியர்களைக் கண்டித்து பலரது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.