வேண்டாம் இனி ஹிரோஷிமா, நாகசாகி.. அமெரிக்க வன்மம்.. 75 ஆண்டுகள் கரைந்தது.. ஜப்பானின் சோகம்!
ஹிரோஷிமா: இரண்டாம் உலகப் போர் முடியும் தருவாயில் ஜப்பானின் இரண்டு முக்கிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி மீது அமெரிக்கா அணு குண்டுகளை வீசியது. இதில் ஹிரோஷிமாவில் 140,000 பேரும், நாகசாகியில் 74, 000 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்து இன்றுடன் 75 ஆண்டுகள் ஆகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கொரோனா காரணமாக நடப்பாண்டில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஹிரோஷிமாவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்களில் சிலர் மட்டும் கூடி அஞ்சலி செலுத்தினர். ஆனால், பொதுமக்கள் யாரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்வில் ஜப்பான் மக்கள் கலந்து கொள்வார்கள். இன்றைய நிகழ்வில் பங்கேற்றவர்களில் பலரும் கருப்பு நிற ஆடை, மாஸ்க் அணிந்து பங்கேற்றனர்.
லடாக்கில் சீன ஆக்கிரமிப்பு.. மத்திய பாதுகாப்பு துறை வெளியிட்ட டாக்குமெண்ட் நீக்கம்.. என்ன நடந்தது?
சுயநல தேசியவாதம்
இந்த நிகழ்வில் பேசிய ஹிரோஷிமா ஆளுநர் கசுமி மட்சுயி, ''கொரோனா வைரஸ் போன்ற உலக அச்சுறுத்தல்களை அனைவரும் ஒன்றிணைந்து விரட்ட வேண்டும். நமக்கு வலி கொடுத்த சம்பவங்கள் மீண்டும் நிகழ்ந்து விடாமல் தடுக்க வேண்டும். சுயநல தேசியவாதம் உள்பட மக்களுக்கு எதிரான அனைத்து அச்சுறுத்தல்களையும் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.
ஆண்டோனியோ கட்டரஸ்
''அணு ஆயுதங்கள் இல்லாத, எப்போதும் அமைதி கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபடுவேன்'' என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். ''அணு ஆயுத ஆபத்துக்களை நீக்குவதற்கு ஒரே வழி, அணு ஆயுதம் இல்லாத உலகமாக மாற்றுவதுதான்'' என்று ஐநா பொதுச் செயலாளர் ஆண்டோனியோ கட்டரஸ் தெரிவித்துள்ளார்.
போரில் இருந்து வாபஸ்
இரண்டாம் உலகப் போர் முடியும் தருவாயில் அமெரிக்கா நடத்திய இந்த கொடூர தாக்குதலில் ஹிரோஷிமாவில் 140,000 பேரும், நாகசாகியில் 74, 000 பேரும் உயிரிழந்தனர். இதற்குப் பின்னர் ஆகஸ்ட் 14, 1945 அன்று போரில் இருந்து வாபஸ் பெறுவதாக ஜப்பான் அறிவித்தது. தனது படைகளை ஜப்பான் வாபஸ் பெற்றது.
கெய்கோ ஒகுரா
ஹிரோஷிமாவில் நடந்த தாக்குதலில் இருந்து தப்பிய 83 வயது முதியவர் கெய்கோ ஒகுரா அளித்திருக்கும் பேட்டியில், ''குண்டுவெடிப்பு நடந்த சம்பவம் இன்றும் எனக்கு நினைவு இருக்கிறது. நினைத்தால் பயமாக இருக்கிறது. அந்த தாக்குதலில் இருந்து யாருமே தப்பி இருக்க முடியாது. அதுமாதிரியான ஒரு தாக்குதல். மனிதகுலம் ஒன்றிணைந்துதான் இதுபோன்ற தாக்குதல்களை தடுத்து நிறுத்த முடியும்'' என்று தெரிவித்துள்ளார்.
ஜப்பான் மீது ஆக்கிரமிப்பு
இன்றுவரை ஜப்பான் மீது அணு குண்டுகள் வீசியதற்கு அமெரிக்கா மன்னிப்போ, வருத்தமோ தெரிவித்தது இல்லை. அணு குண்டு வீசியதால் ஜப்பான் மீது ஆக்கிரமிப்பு செய்வதை அமெரிக்கா நிறுத்திக் கொண்டது. இல்லையென்றால் ஜப்பான் நிலத்தை அமெரிக்கா ஆக்ரமிப்பு செய்து இருக்கும் என்று வரலாறு கூறுகிறது. இது இன்னும் ஜப்பானுக்கு அழிவை ஏற்படுத்தி இருக்கும் என்று விமர்சிக்கப்பட்டது.
அணுகுண்டு
ஆனால், இன்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல் போர் குற்றமாகவே கருதப்படுகிறது. மக்கள் வசிக்கும் பகுதியில் அணுகுண்டு வீசி இருப்பது இன்றும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.
போப் பிரான்சிஸ்
இந்த சம்பவத்துக்குப் பின்னர் முதல் அமெரிக்க ஜனாதிபதியாக 2016ல் பாரக் ஒபாமா ஜப்பான் சென்று இருந்தார். அப்போதும் நடந்த சம்பவத்துக்கு அவர் அவர் மன்னிப்பு கேட்கவில்லை. அதற்கு மாறாக உலகை அணு ஆயுதத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பேசி இருந்தார். இதேபோல் கடந்தாண்டு ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய இடங்களில் பயணம் மேற்கொண்டு இருந்த போப் பிரான்சிஸ், ''வர்ணிக்க முடியாத ஒரு திகில் சம்பவம்'' என்று கூறி இருந்தார்.