ஹிட்லர் தற்கொலை செய்யவில்லை- தப்பி தலைமறைவானார்: இங்கிலாந்து வரலாற்று ஆய்வாளர் பரபரப்பு தகவல்
லண்டன்: 2வது உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானது என்று இங்கிலாந்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஜெர்ராட் வில்லியம்ஸ் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
2வது உலகப் போரில் நேச நாட்டுப் படைகளிடம் ஜெர்மனி தோல்வியடைந்தது. இதனால் மனைவி இவா பிரானுடன் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார் என்கிறது சரித்திரம்.
அத்துடன் இருவரது உடல்களும் எதிரிகளுக்குக் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக அவை உடனடியாக தீயிட்டு எரிக்கப்பட்டன என்கிறது வரலாற்றுப் பக்கங்கள்.. ஆனால் இந்தச் சம்பவம் உண்மைக்குப் புறம்பானது என்று இங்கிலாந்தின் வரலாற்று ஆய்வாளர் ஜெர்ராட் வில்லியம்ஸ் கூறுகிறார்...
இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் ஜெர்ராட் கூறியுள்ளதாவது:
- ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் 1945-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அவரது பதுங்கு குழியில் 2 பேர் உயிரிழந்ததும், உயிரிழந்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டதும் உண்மையாக இருக்கலாம்.
- எரிக்கப்பட்ட இரு உடல்களும் ஹிட்லர், இவா பிரானுடையது இல்லை.
- ஹிட்லர், இவா பிரானைப் போல தோற்றம் கொண்ட 2 பேரை படுகொலை செய்து அந்த உடல்களைத்தான் ஹிட்லரின் சகாக்கள் எரித்துள்ளனர்.
- ஒரிஜனல் ஹிட்லரும், இவா பிரானும் ஜெர்மனியிலிருந்து தப்பிவிட்டார்கள் என நம்புகிறேன்.
- ஹிட்லரின் உதவியாளர் மார்டின் பார்மனின் யோசனைப்படிதான் ஹிட்லர்-இவா பிரான் தற்கொலை நாடகம் அரங்கேறியது.
- ஒரு பொய்யை திரும்பத் திரும்பக் கூறினால் அதை உலகம் நம்பிவிடும் என்ற கோயபல்ஸ் பாணியை மெய்ப்பிக்கும் வகையில் அந்த நாடகத்தை உண்மையென அனைவரும் நம்பி வருகின்றனர்.
- ஹிட்லரின் பதுங்கு குழியைக் கைப்பற்றிய ரஷ்யா படையினர் அவரது உடலைக் கண்டெடுத்ததாக 1945-ஆம் ஆண்டே அறிவிக்கவில்லையே..
- ஹிட்லரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக 1968-ஆம் ஆண்டுதான் ரஷ்யாவே அறிவித்தது.
- ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட அமெரிக்க உளவுத் துறை உலகம் முழுவதும் ஹிட்லரை வலை வீசித் தேடிக் கொண்டிருந்ததது. ஏனெனில் ஹிட்லர் தற்கொலை செய்யவில்லை என்பது அவர்களுக்கும் தெரியும்.
இவ்வாறு ஜெரால்டு வில்லியம்ஸ் கூறியுள்ளார்.