விலங்குகளைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர ஹிட்லரின் ‘ஜூராசிக் மான்ஸ்டர்’ அம்பலம்
பெர்லின்: விலங்குகளைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர சர்வாதிகாரி ஹிட்லர் முயற்சி செய்தது தற்போது தெரிய வந்துள்ளது.
1990களில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் ஜூராசிக் பார்க். அப்படத்தில் அழிந்து விட்ட டைனோசர் இனங்களை புதுப்பித்து அவற்றை வெளிஉலகிற்கு தெரியாமல் வளர்ப்பார்கள். பயங்கர விலங்குகளில் ஒன்றான டைனோசரை தங்களுக்கு சாதகமானபடி வளர்ப்பது போன்று அப்படத்தின் காட்சிகள் அமைந்து இருக்கும்.
இந்நிலையில், தற்போது அப்படத்தின் காட்சிகளை உண்மையிலேயே செயல்படுத்த ஹிட்லர் காலத்தில் நடந்த முயற்சிகள் ஆவணப்படம் ஒன்றின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆவணப்படம்
நாசி படைகளை கொண்டு யூதர்களை கொன்று குவித்த சர்வாதிகாரியான ஹிட்லர், மிருக இனத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர எடுத்த முயற்சியை நேஷனல் ஜியாகிரபிக் சேனல் ஆவண படமாக எடுத்துள்ளது.
பழங்கால விலங்குகள்...
இந்த ஆவணப்படத்தில் வேட்டையாட பயன்படுத்துவதற்காக பழங்கால மிருகங்களை உயிர்ப்பிக்க நாசிக்கள் முயற்சித்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த பின்னணியாக இருந்தவர்கள் விலங்கியலாளர்கள் லட்ஸ் மற்றும் ஹெயின்ஸ் ஹெக் என்பவர்கள் என அந்த ஆவணப்படம் தெரிவிக்கின்றது.
தனியார் திட்டம்...
முதலில் தனியார் திட்டமாக இது தொடங்கப்பட்டதாகவும், பின்னர் ஹிட்லரின் இரண்டாவது படைத் தளபதியாக ஹெர்மான் கோரிங் என்பவரை லட்ஸ் நண்பராக்கி கொண்டதன் மூலம் அரசு திட்டமாக மாறியதாகத் தெரிகிறது.
விலங்குகள்...
இரண்டு நோக்கங்களை முன்னிறுத்தி இந்தத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதில் முதலாவது விலங்குகள், இரண்டாவது நிலம். விலங்குகளில் இரண்டை ஆராய்ச்சியாளர்கள் தேர்வு செய்துள்ளனர். அவற்றில் ஒன்று ஆரோக். மற்றொன்று தர்பான்.
ஆரோக், தர்பான்...
ஆரோக், இது மிக பெரிய அளவிலான, காட்டு பகுதியில் வளரும் கால்நடையாகும். அதேபோல், தற்பொழுது உள்ள குதிரை இனத்தின் மூதாதையரான தர்பான், ஆக்ரோஷமான மற்றும் காட்டு விலங்காகும்.
போலந்து காடு...
இந்த திட்டத்திற்கு நாசிக்கள் தேர்வு செய்த பகுதி போலந்து நாட்டில் உள்ள பையலோவீசா வன பகுதி ஆகும். இங்கு ஏராளமான ஓநாய்கள் தங்களது வாழ்விடத்தை அமைத்து இருந்துள்ளன. அதிக அளவிலான காட்டு பூனைகள், ஐரோப்பிய மானினத்தை சேர்ந்த காட்டு மான்கள் மற்றும் ஐரோப்பிய காட்டு எருதுகள் ஆகியவையும் அங்கு இருந்து உள்ளன.
கையகப் படுத்தப்பட்ட நிலம்...
இந்த திட்டத்தை முடிக்க அவர்களுக்கு நீண்ட காலம் தேவைப்படவில்லை. அவர்கள் போலந்து நாட்டை படை எடுத்து கைப்பற்றியதுடன் நிலத்தை கையகப்படுத்துவது எளிதானது. அதன்பின் தங்களுக்கே உரிய முறையில் இடத்தை தூய்மைப்படுத்தினர்.
அப்புறப்படுத்தப்பட மக்கள்....
அதாவது, மூன்றே வருடங்களில் அங்கு வசித்த 20 ஆயிரம் மக்களை அப்புறப்படுத்தினர். அங்கு வசித்த மக்களில் பெரும்பான்மையானோர் யூதர்கள் என்பதால், பலருக்கு அங்கேயே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் முகாம்களுக்கு அனுப்பப் பட்டுள்ளனர்.
காட்டுக்குள் அனுப்பப்பட்ட ஆரோக்கள்...
நிலம் கிடைத்து விட்டதையடுத்து விலங்குகளை பெருக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக லட்ஸ் ஹெக் ஆரோக் இன விலங்கின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்தார். அதனை காட்டு பகுதியில் உடனடியாக அனுப்பி வைத்தார்.
ஆராய்ச்சியாளர்கள் கருத்து...
இந்த ஆரோக் விலங்கு உடலளவில் பழங்கால விலங்கினத்தை ஒத்ததாக இருந்தாலும், வேறு எந்த கால்நடையோடும் மரபு வழியே நெருங்கியிருக்கவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அரிய விலங்குகளின் புகலிடம்...
போலந்து மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கு இடையே மிக பெரிய இயற்கை வன பகுதியாக இன்று இந்த பகுதி உள்ளது. அரிதாக உள்ள காட்டு எருது இனம் உட்பட பல அரிதான விலங்குகளின் மிக பெரும் புகலிடமாகவும் இது விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆரோக்களின் நிலை என்ன?
இதில் விடை தெரியாத கேள்வி என்னவெனில், நாசிக்களின் திட்டப்படி பெருக்கப்பட்ட ஆரோக் விலங்குகளின் தற்போதைய நிலை என்ன என்பது தான். எனினும், சோவியத் அதிகாரிகள் அல்லது சிப்பாய்களால் அவை கொல்லப்பட்டு இருக்க கூடும் என யூகிக்கப் படுகிறது.
காணத்தவறாதீர்கள்....
இந்த ஆவணப்படமானது, ‘ஹிட்லரின் ஜுராசிக் மான்ஸ்டர்ஸ் நிகழ்ச்சி' என நேஷனல் ஜியாகிரபிக் சேனலில் நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் ஒரு மணியளவில் ஒளிபரப்பாக இருக்கிறது.