2ம் உலகப் போரில் உயிர் தப்பிய... ஹிட்லர் வளர்த்த செல்ல ‘முதலை’ மரணம்!
ஜெர்மனி நாசிப்படையின் தலைவர் அடால்ஃப் ஹிட்லர் வளர்த்ததாக கருதப்பட்ட முதலை உயிரிழந்தது.
மாஸ்கோ: ஜெர்மானிய நாசிப்படைகளின் தலைவர் மறைந்த அடால்ப் ஹிட்லரால் வளர்க்கப்பட்டதாகக் கருதப்படும் 84 வயது முதலை ரஷ்யாவில் உயிரிழந்தது.
சர்வாதிகாரத்தின் முழு உருவமாய் திகழ்ந்தவர் அடால்ப் ஹிட்லர். ஜெர்மானிய நாசிப்படைகளின் தலைவரான அவர் தான் இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்டவர். ஆனால் அவரால் அப்போரில் வெற்றி பெற முடியவில்லை.
கடந்த 1945ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி ஜெர்மன் தலைநகர் பெர்லினில் ஹிட்லர் தனது மனைவி இவா பிரானுடன் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். ரஷ்யப் படைகள் பெர்லினை முற்றுகையிட்டு வெற்றி பெற்றதே அதற்கு காரணம்.
ஏப்ரல்- மே என்னங்க.. ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு மிக மோசமாக இருக்கும்.. எச்சரிக்கும் நிபுணர்
அடால்ப் ஹிட்லர்
சர்வாதிகாரியான ஹிட்லருக்கு விலங்குகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் இருந்தது. அடிக்கடி பெர்லின் உயிரியல் பூங்காவிற்கு சென்று அங்குள்ள விலங்குகளை பார்ப்பது ஹிட்லரின் வாடிக்கை.
முதலைக்குட்டி
பெர்லின் உயிரியல் பூங்காவில் இருந்த சடோன் என்ற முதலைக்குட்டி மீது ஹிட்லருக்கு தனிப்பிரியம் இருந்தது. அமெரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட அந்த முதலையை பூங்காவுக்கு செல்லும் போதெல்லாம் ஹிட்லர் தவறாமல் பார்த்து வந்தார்.
உயிர் தப்பிய முதலை
பெர்லின் உயிரியல் பூங்காவில் எதிரிப்படைகள் நடத்திய தாக்குதலில் அங்கிருந்த முதலைகள் உள்ளிட்ட விலங்குள் பல பலியாகின. ஹிட்லர் மரணித்த சில ஆண்டுகள் கழித்து ஒரு முதலையை இங்கிலாந்து படையினர் கண்டெடுத்தனர். ஆனால் அது தான் சடோன் முதலை என அவர்கள் கூறினர்.
மாஸ்கோ உயிரியல் பூங்கா
இதையடுத்து அந்த முதலை ரஷ்யாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. மாஸ்கோவில் உள்ள உயிரியல் பூங்காவில் வைத்து சடோன் பராமரிக்கப்பட்டு வந்தது. சுமார் 75 ஆண்டுகளாக அந்த முதலை அங்கு தான் வளர்ந்து வந்தது.
சடோனும் பார்வையாளர்களும்
ஹிட்லரால் வளர்க்கப்பட்ட சடோன் முதலை இது தான் என மாஸ்கோ உயிரியல் பூங்காவிற்கு வரும் பார்வையாளர் கருதினர். ஆனால் உயிரியல் பூங்கா நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அந்த முதலை சடோன் தான் என இதுவரை அறிவிக்கவில்லை.
முதலை மரணம்
இந்நிலையில் 84 வயதாகும் அந்த முதலை நேற்று முன்தினம் உயிரிழந்தது. வயது முதிர்வு காரணமாக முதலை உயிரிழந்ததாக மாஸ்கோ உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஹிட்லரால் வளர்க்கப்பட்டதாக கருதப்பட்ட சடோன் முதலை உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.