ரொம்ப கஷ்டம்.. மனிதர்களிடமிருந்து நாய்க்கும் பரவியது கொரோனா வைரஸ்.. அதிர்ச்சி தகவல்கள்
ஹாங்காங்: மனிதர்களிடையே பரவி வந்த வைரஸ் இப்போது நாய்க்கும் பரவி இருக்கக்கூடிய அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
சீனாவின் வூஹான் மாகாணத்தில் துவங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு, அங்கிருந்து உலகின் பல பகுதிகளுக்கும் பரவியது. நேற்று இரவு நிலவரப்படி இந்தியாவில் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
நடவடிக்கைகள் தீவிரம்
ஹோலிப்பண்டிகை கொண்டாட்டங்களை தவிர்க்க இருப்பதாக குடியரசு தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் அறிவித்துள்ளனர். இப்படியாக ஒரு பக்கம் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்க கூடிய நிலையில், ஒரு அதிர்ச்சித் தகவல் ஹாங்காங் நகரத்திலிருந்து வெளியாகியுள்ளது. அங்குள்ள ஒரு நாய்க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளதாக ஹாங்காங் விவசாயம் மற்றும் மீன்வளத்துறை அறிவித்துள்ளது. அந்த நாய் உரிமையாளர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர் மூலமாக அது பரவியதாகவும் கூறப்படுகிறது.
ரத்த பரிசோதனை
இதுகுறித்து அந்த துறை சார்பில், வெளியிட்டுள்ள அறிக்கையில், நாய்க்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மறுபடியும் அதற்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்படும். பாதிப்பு சரி செய்யப்பட்டதாக சோதனையில், தெரியவந்தால் அதன்பிறகுதான் உரிமையாளரிடம் அந்த நாய் ஒப்படைக்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், உலக சுகாதார நிறுவனம் தனது இணையதளத்தில், இதுவரையில் கொரோனா வைரஸ், செல்லப்பிராணிகளுக்கு பரவியதாக எந்த ஒரு தரமும் தங்களிடம் இல்லை என்று தெரிவித்துள்ளது.
ஹாங்காங் நிலவரம்
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்று ஹாங்காங். அங்கு 103 பேர் பாதிக்கப்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு உள்ள ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், உணவகங்கள் போன்றவை மக்கள் கூட்டம் இன்றி காணப்படுகின்றன. பெரும்பாலான ஊழியர்கள் வீட்டிலிருந்தபடி பணியாற்றி வருகிறார்கள். ஏப்ரல் இரண்டாவது வாரம் வரை பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் தப்பியது
சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தாக்கம் தென்கொரியா, பாகிஸ்தான், இந்தியா போன்ற அண்டை நாடுகளுக்கு பரவியதோடு, இல்லாமல் தூரப் பிரதேசங்களான ஐரோப்பிய நாடுகள், ஈரான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் பரவியுள்ளன. அதேநேரம் தமிழகத்தில் நோய் பாதிப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது. நேற்று இரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இதை உறுதி செய்தார்.
நாய் குணமாக வேண்டும்
கொரோனா பாதிக்கப்பட்டு உயிர் இழப்போர் எண்ணிக்கை என்பது வெறும் 2% மட்டுமே. அதுவும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு தான் பாதிப்பு அதிகம் என்பதால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று விஜயபாஸ்கர் கூறியிருந்தார். இருப்பினும் செல்லப் பிராணிகளுக்கும் இந்த வைரஸ் தொற்றினால் அதைக் கட்டுப்படுத்துவது என்பது மிகவும் சிரமமாகி விடும் என்பதால் ஹாங்காங்கிலிருந்து வெளியாகி உள்ள தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அந்த நாய் குணம் அடைய வேண்டும் என்றும் ஒட்டுமொத்த உலகமும் வேண்டிக் கொண்டு இருக்கிறது.