பாத்ரூம், டாய்லெட், கார் பார்க்கிங், மொட்டை மாடியில் தங்கும் பணிப்பெண்கள்.. ஹாங்காங் கொடுமை
ஹாங்காங்கில் பணிப்பெண்களை, கழிவறை, சரக்கு குடோன் போன்றவற்றில் தங்கச் சொல்லி கொடுமைப்படுத்தப்படுகின்றனராம்.
ஹாங்காங்: ஹாங்காங்கில் வீட்டு வேலை பார்க்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த பணிப்பெண்கள் கழிவறை, சரக்கு குடோன், போன்றவற்றில் தங்க வைக்கப்படுவதாக நாடு கடந்த ஊழியர்களுக்கான தன்னார்வக் குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஹாங்காங்கில் மொத்தம் 3,50,000 பெண்கள், வீடுகள், அலுவலகங்கள் போன்றவற்றில் பணிப்பெண்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பலரும் சுகாதாரம், உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட சீர்கேடுகளுக்கு ஆளாவதாக, நாடுகடந்த ஊழியர்களுக்கான தன்னார்வக் குழு ஒன்று கடுமையான புகாரைக் கூறியுள்ளது.
ஹாங்காங்கில் பல்வேறு வகையில் பெண்களுக்கு சிக்கல்கள் இருக்கும் நிலையில் இதுபோன்று வீட்டுவேலை செய்யும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மேலும் அங்கு வாழும் பெண்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்ப டுத்தியுள்ளது. இதுகுறித்து பலமுறை அரசுக்குப் புகார்கள் அளித்தும் உரிய நடவடிக்கைகள் ஒன்றும் எடுக்கப்படுவதில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார்கள் அளித்துள்ளனர்.
வீட்டுப் பணிப்பெண்கள் நிலை
நாடு கடந்த ஊழியர்களுக்கான தன்னார்வக் குழு, ஹாங்காங்கில் விரிவான ஆய்வு நடத்தியுள்ளது. அவர்கள் நடத்திய ஆய்வின் விவரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. இது ஹாங்காங் அரசு அதிகாரிகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடுமையான பாதிப்பில் பெண்கள்
தன்னார்வக் குழுவின் ஆய்வில், ஹாங்காங்கில் பணிபுரியும் பணிப்பெண்கள் பலரும், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் பணி நேரம் மட்டுமின்றி, மற்ற நேரங்களிலும் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
டாய்லெட், பாத்ரூம் வாழ்க்கை
3.5 லட்சம் பணிப்பெண்கள், தாங்கள் வேலை பார்க்கும் வீடுகள் மற்றும் அலுவலகங்களின் சமையல் அறை, சரக்கு குடோன், கழிவறை, கார் பார்க்கிங், குளிர்சாதனப் பெட்டியின் உள் அறை, மொட்டை மாடி, பால்கனி உள்ளிட்ட இடங்களில் தங்க வைக்கப்படுவதாகக் கூறுகிறார்கள்.
பொந்து வாழ்க்கையில் இளம்பெண்கள்
சட்ட ரீதியான நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்காக, தங்களது பணியாளர்கள் இப்படி, தங்களை கொடுமைப்படுத்துவதாக, அந்த பணிப்பெண்கள் தெரிவித்துள்ளார்கள். இதில் உச்சக்கட்டமாக, சில பணிப்பெண்கள், குளியல் அறையின் ஷவர் பெட்டி மேலே சிறு பொந்து ஏற்படுத்தி, அதில் தங்க வைத்துள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளதாக, ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பில் அரசு அக்கறை
பணிப்பெண்களின் உடல்நலம், சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது ஹாங்காங் அரசின் கடமை என்றும், தன்னார்வக் குழுவின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.