ஹாங்காங்கில் அரசுக்கு எதிரான போராட்டம் விஸ்வரூபம்.. போலீஸ் துப்பாக்கிச் சூட்டால் பதற்றம்
பீஜிங் : ஹாங்காங்கில் கடந்த வாரத்தில் மாணவர் ஒருவர் உயிரிழப்பை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கலைத்த சம்பவத்தை தொடர்ந்து அங்குள்ள சாய் வான் ஹோ நகரில் தொடர் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. இந்தப் போராட்டத்தை துப்பாக்கிச்சூடு நடத்தி காவல்துறையினர் கலைக்க முற்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் இதுவரை மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை தலைதூக்கவிடாமல் செய்யும்வகையில், போலீசார் துப்பாக்கிச்சூடு, கண்ணீர் புகை குண்டு உள்ளிட்டவற்றை பிரயோகித்து வருகின்றனர்.
சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தன்னாட்சி நடைமுறையில் உள்ள ஹாங்காங்கில் கொண்டுவரப்பட்டுள்ள கிரிமினல் குற்றவாளிகளை சீனாவிற்கு நாடுகடத்தி விசாரிக்கும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தற்போது வேறுவிதத்தில் இந்த போராட்டம் மீண்டும் தலைதூக்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கட்டுப்படுத்த முடியாத காட்டுத் தீ.. காரணம் இந்திய பருவமழை.. அதிர்ச்சி தகவல்
தொடரும் மக்கள் போராட்டம்
ஹாங்காங் அரசு கொண்டுவந்துள்ள கிரிமினல் குற்றவாளிகளை சீனாவிற்கு நாடுகடத்தி விசாரிக்கும் சட்டமசோதாவை கண்டித்து கடந்த 6 மாதங்களாக அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில், அங்கு கடந்த வாரத்தில் சாய் வான் ஹோ நகரில் மருத்துவமனையில் மாணவர் ஒருவர் உயிரிழந்ததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை தாக்குதல் நடத்தி காவல்துறையினர் தடுக்க முயன்றதால், அங்கு கடந்த சில தினங்களாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
பெப்பர் ஸ்ப்ரே தெளிப்பு
போராட்டத்தை முறியடிக்கும்வகையில் காவல்துறையினர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் போராட்டத்தை கலைக்க அங்கிருந்த பெண்கள் மீது பெப்பர் ஸ்ப்ரேவும் தெளிக்கப்பட்டன. மேலும் கண்ணீர்புகை குண்டுகளும் வீசப்பட்டன.
மருத்துவமனையில் சிகிச்சை
போலீசாரின் இந்த திடீர் துப்பாக்கிச்சூட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீசார் தாக்குதல்களில் ஏற்கனவே இருவர் காயமடைந்துள்ளனர்.
சமூகவலைதளங்களில் வீடியோ பகிர்வு
அங்கிருந்த குளம் ஒன்றின் அருகில் உடலெங்கும் ரத்தக்காயங்களுடன், கண்கள் வெறித்தப்படி ஒருவர் கிடந்த காட்சி சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு பல்வேறு தரப்பினரின் கண்டனங்களுக்கும் உள்ளாகியுள்ளது. சாய் வான் ஹோ நகரின் பல பகுதிகளில் தடுப்புச்சுவர்களை அமைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய போராட்டக்காரர்களின் செயலை முறியடிக்கும் வகையிலேயே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நேரடி துப்பாக்கிச்சூடு
ஆனால் இந்தக் கருத்தை அங்கிருந்த பொதுமக்கள் மறுத்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தும்வகையில் போராட்டக்காரர்களை நோக்கி ஓடிவந்த போலீசார், சரமாரியாக சுட்டதாக தெரிவித்தனர். இதற்கு காரணம் அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதே என்றும் அவர்கள் கூறினர்.
சீனா மறுப்பு
தன்னாட்சி அதிகாரத்தை கொண்டுள்ள ஹாங்காங்கின் நிர்வாகத்தில் சீனா அத்துமீறி தலையிடுவதாக ஹாங்காங் மக்கள் தொடர் குற்றச்சாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டியே இந்த தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துவரும் சீனா, மேற்கு நாடுகளின் தூண்டுதல்களாலேயே இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது.